கைகொடுக்கும் இளம்புயல்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்தான் ஷெபாலி. இவரது அட்டகாசமான பேட்டிங்தான் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இதற்கு அவர் காட்டிய அர்ப்பணிப்பு மிகுந்த பேட்டிங்கும், கடுமையான பயிற்சிகளுமே முழுக் காரணமாகும். ஸ்மிருதி மந்தனாவும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் சொதப்பும் போதெல்லாம் கை கொடுக்கத் தவறாதவர் ஷெபாலி.
சிக்ஸர் ஸ்பெஷலிஸ்ட்
16 வயதேயாகும் ஷெபாலியின் ஸ்டிரைக் ரேட் 161 ஆகும். இது இந்தத் தொடரின் முன்னணி வீராங்கனைகள் யாரிடமும் இல்லாத ஸ்டிரைக் ரேட் ஆகும். மேலும் இந்தத் தொடரில் அவர் 9 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்த வருட தொடரில் இதுவும் அதிகபட்ச சிக்ஸர்களாகும். சிக்ஸர் அடிப்பதில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார் ஷெபாலி. இதற்காகவே அவர் தனியாக பயிற்சியும் செய்கிறார் என்பது ஆச்சரியம்தான்.
ஷாட்டை விடாமல் அடிக்க பயிற்சி
பயிற்சியாளர் அஸ்வனி குமாரின் கீழ் ரோதக் நகரில் உள்ள ஸ்ரீராம் நாராயண் கிரிக்கெட் அகாடமியில் இதற்காகவே பிரத்யேகமாக பயிற்சி எடுத்துள்ளார் ஷெபாலி. அதாவது குறைந்தது ஒரு நாளைக்கு 50 முறை சிக்ஸர் அடிக்கும் பயிற்சியை மேற்கொண்டுள்ளாராம் ஷெபாலி. இதுகுறித்து அஸ்வனி குமார் கூறுகையில், நாங்கள் அவரை சிக்ஸர் அடிக்க நிறைய பயிற்சி அளித்துள்ளோம். வருகிற எந்த ஷாட்டையும் விடாமல் அடிக்க பயிற்சி கொடுத்துள்ளோம்.
சிரமப்பட்டு முன்னேறிய வீராங்கனை
அவர் இயற்கையிலேயே ஸ்டிரைக்கர் ஆவார். எனவே சிக்ஸர் விளாச அவருக்கு இயல்பான பலம் கிடைத்து விடுகிறது. அதேசமயம், அவரது ஸ்டைலையும் நாங்கள் கெடுக்காத வகையில் பயிற்சியை வடிவமைத்தோம். அது தற்போது வெற்றிகரமாக மாறியுள்ளது என்றார் அஸ்வனி குமார். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த கிரிக்கெட் உலகில் உயரிய நிலைக்கு வர ஷெபாலி கொடுத்த விலை மிகவும் அதிகமே. அந்த அளவுக்கு சிரமப்பட்டுத்தான் முன்னேறியுள்ளார்.
திறமையை நிரூபித்த இளந்திறமை
அவர் ஆரம்பத்தில் ஆண்களுடன் இணைந்துதான் பிராக்டிக்ஸ் செய்தார். இதற்குக் காரணம் இவரது அதிரடி வேகம் சக வீராங்கனைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதால் ஆண்களுடன் இவரை பிராக்டிஸ் செய்ய வைத்தனர். அதில்தான் தனது திறமையை அவர் நிரூபித்தார். அந்த திறமைதான் இன்று இந்திய அணியின் முக்கிய வீராங்கனையாக அவரை உயர்த்திப் பிடித்துள்ளது.