மற்ற அணி வீரர்கள் அச்சம்
சிஎஸ்கே வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு துபாயில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அந்த அணியின் தீபக் சஹார் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் நடத்தப்பட்ட பயிற்சி முகாம் இவர்களது கொரோனா தொற்றுக்கு காரணமாக கூறப்பட்டாலும், மற்ற அணி வீரர்கள் இதனால் அச்சமடைந்துள்ளனர்.
தனித்தனியாக தங்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள்
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நாம் யூஏஇக்கு கொண்டாட்டத்திற்காக வரவில்லை என்றும் பயோ பபள் முறையை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி அனைத்து அணிகளின் வீரர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடவுள்ள நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கொரோனா அச்சுறுத்தலால்தான் ஒவ்வொரு அணி வீரர்களும் தனித்தனியான ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விரைவில் மீண்டு வருவார்கள்
சிஎஸ்கே அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது மிகவும் மோசமான செய்தி என்று தெரிவித்துள்ள கேன் வில்லியம்சன் அவர்கள் விரைவில் இதிலிருந்து மீண்டு வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக யூஏஇயில் இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேன் வில்லியம்சன் உள்ளிட்ட 6 நியூசிலாந்து வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
விழிப்புடன் இருக்க வேண்டும்
இந்நிலையில் இன்று ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக இன்று யூஏஇ பயணம் மேற்கொள்ளவுள்ள கேன் வில்லியம்சன், இந்த பயணத்தை மேற்கொள்வதற்கு சிறிது அச்சமாகத்தான் உள்ளது என்று கூறியுள்ளார். ரேடியோ நியூசிலாந்துக்கு வில்லியம்சன் அளித்த பேட்டியில் தற்போது இதுகுறித்து யோசிப்பதைவிட மிகுந்த விழிப்புடனும் ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டியது குறித்து தான் நமது யோசனை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.