உலகக்கோப்பை தோல்வி
இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிச் சுற்றுடன் தோல்வி அடைந்து வெளியேறியது. உலகக்கோப்பை வெல்லும் அணி என கருதப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்ததால், அணியில் இருந்த சிறு பிரச்சனைகள், குழப்பங்கள் எல்லாம் பூதாகரமாக மாறியது.
பரவிய வதந்தி
அதில் உச்சகட்டமாக விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே விரிசல் இருப்பதாகவும், இருவருக்கும் உலகக்கோப்பை தொடரின் போது பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
கேப்டன் மாற்றம்
அதன் பின், பிசிசிஐ இந்திய அணியில் பல மாற்றங்களை செய்ய உள்ளது, குறிப்பாக, டெஸ்ட் அணிக்கு கோலியையும், ஒருநாள் அணிக்கு ரோஹித் சர்மாவையும் கேப்டனாக நியமிக்க திட்டம் தயார் செய்து வருவதாக கூறப்பட்டது. பலரும் இதற்கு மூல காரணமாக கோலி - ரோஹித் சர்மா இடையே உள்ள விரிசலை சுட்டிக் காட்டினர்.
சுத்த முட்டாள்தனம்
இந்த நிலையில், அணியில் எந்த விரிசலும் இல்லை என டைம்ஸ்ஆஃப்இந்தியா இணையதளத்தில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அவர், "அணியில் பிளவு இருக்கிறது. பிரச்சனைகள் இருக்கிறது என சுத்த முட்டாள்தனமான தகவல்கள் கூறப்பட்டு வருகிறது." என்று கூறி இருக்கிறார்.
பொய்யான தகவல்
மேலும், "எந்த கிரிக்கெட் வீரர் மற்றொரு கிரிக்கெட் வீரரை வெறுப்பார்? யார் விளையாடவில்லையோ அவர் தான் வெறுப்பார். உலகக்கோப்பை முடிந்து விட்டது. சிலருக்கு நல்ல தலைப்பு தேவைப்பட்டு இருக்கிறது. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சில விஷயங்களை மாற்றிக் கொள்வது ஏமாற்றமாக உள்ளது என கூறி இருக்கிறார்.