நீண்ட நாட்களாக ஆடாத ஹர்திக்
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தன்னுடைய முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இதையடுத்து சில தொடர்களில் அவர் இடம்பெறாத நிலையில் கடந்த மார்ச் மாத துவக்கத்தில் நடத்தப்பட்ட டிஒய் படேல் டி20 தொடரில் அவர் பங்கேற்றார். இதையடுத்து தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இடம்பெற்றார். ஆனால் அந்த தொடர் கொரோனாவால் கைவிடப்பட்டது.
ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளார். இடையில் கொரோனாவால் வீட்டில் முடங்கிய அவர், தன்னுடைய பிட்னஸ் பயிற்சிகளை மட்டும் கைவிடாமல் தொடர்ந்து செய்து வந்தார். இதன் புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைதளப் பதிவுகளில் அவ்வப்போது பகிர்ந்தார்.
ஹர்திக் பாண்டியா உறுதி
தற்போது தன்னுடைய உடல் மற்றும் மனநிலை இரண்டும் சிறப்பாக உள்ளதாகவும் போட்டிகளில் பங்கேற்க தான் மிகுந்த சிறப்புடன் தயாராகி உள்ளதாகவும் பாண்டியா தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள ஹர்திக் பாண்டியா, எவ்வளவு காலங்கள் நாம் போட்டிகளில் இருந்து விலகியிருக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. மீண்டும் வரும்போது எவ்வாறு நம்மை வெளிப்படுத்துகிறோம் என்பதே முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
மீண்டுவரும் வலிமை
தான் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்று வருவதாகவும், இந்த சீசனின் போட்டிகளுக்காக காத்திருப்பதாகவும் ஹர்திக் பாண்டியா மேலும் கூறியுள்ளார். தான் தொடர்ந்து காயங்களுடனேயே பயணித்து வருவதாகவும் அதிலிருந்து மீண்டுவரும் வலிமை தனக்கு இயல்பாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் இதுவரை 66 போட்டிகளில் விளையாடியுள்ள பாண்டியா, 1,068 ரன்களை குவித்துள்ளார்.