கொரோனா வைரஸ் பரவல்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையாக பரவி வருகிறது. சுமார் 15 லட்சம் மக்கள் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை ஒரு விரைவில் ஒரு லட்சத்தை தொட உள்ளது.
லாக்டவுன் தீர்வு
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது மட்டுமே ஒரே வழியாக உள்ளது. இதை செயல்படுத்த ஒவ்வொரு நாடும் லாக்டவுன் அறிவித்துள்ளது. இந்தியாவிலும் 21 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது.
தொலைக்காட்சிகள் ஆறுதல்
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். மற்றபடி, இந்த 21 நாட்கள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே தான் இருக்க வேண்டும். இந்த இக்கட்டான நிலையில், மக்களுக்கு தொலைக்காட்சிகள் தான் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளன.
பிசிசிஐ யோசனை
கிரிக்கெட் ரசிகர்கள் பலர் இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டி தூர்தர்ஷன் தொலைக்காட்சியுடன் பிசிசிஐ கை கோர்த்து கடந்த சில நாட்களாக பழைய சிறந்த கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பி வருகிறது.
பணம் வாங்கவில்லை
பிசிசிஐ வசம் இருக்கும் கிரிக்கெட் போட்டிகளின் வீடியோக்களின் ஒளிபரப்பு உரிமைக்கான தொகை செலுத்தினால் மட்டுமே அந்த வீடியோக்கள் தொலைக்காட்சிகளுக்கு அளிக்கப்படும். ஆனால், தூர்தர்ஷன் நிறுவனத்துக்கு பணம் பெற்றுக் கொள்ளாமலேயே இந்த வீடியோக்களை ஒளிபரப்ப அனுமதி அளித்துள்ளது பிசிசிஐ.
நோக்கம் இதுதான்
கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து போராட தங்களால் இயன்ற உதவியாக இந்த தூர்தர்ஷன் ஒளிபரப்பிற்கு கிரிக்கெட் போட்டி வீடியோக்களை அளித்துள்ளது பிசிசிஐ. மக்களை வீட்டுக்குள் வைத்திருப்பது தான் எங்கள் நோக்கம் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் இது பற்றி பேசி உள்ளார்.
லாக்டவுன் முடியும் வரை..
ஏப்ரல் 14 வரை லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை தூர்தர்ஷன் பழைய கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பெற்று ஒளிபரப்ப உள்ளது. அதன் பின்னும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டால் பிசிசிஐ தொடர்ந்து தங்கள் கிரிக்கெட் போட்டி வீடியோக்களை அளிக்கும் என கூறப்படுகிறது.