முதல் சதம்
ஏப்ரல் 5 அன்று தோனி தன் முதல் சர்வதேச சதத்தை அடித்து 15 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதை ஒட்டி தோனி பற்றி பல நினைவுகளை பகிர்ந்து கொண்டார் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா. தோனியின் முதல் சதம் அடித்த போட்டியிலும் அவர் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுகம் எப்போது?
2004 டிசம்பர் மாதம் தோனி இந்திய ஒருநாள் அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். சேவாக், யுவராஜ் சிங், ஜாகிர் கான் என பல முன்னணி வீரர்களை அடையாளம் கண்டு இந்திய அணிக்கு அழைத்து வந்த கேப்டன் சௌரவ் கங்குலி தான் தோனியையும் இந்திய அணிக்கு அழைத்து வந்தார்.
அதிரடி பேட்ஸ்மேன்
தோனி அதிரடி பேட்ஸ்மேன் என்பது மட்டுமே அப்போது பலருக்கும் தெரிந்து இருந்தது. துவக்கத்தில் பின்வரிசையில் தான் பேட்டிங் செய்து வந்தார். சில போட்டிகளில் ஓரளவு ரன் சேர்த்தாலும், அவரது பேட்டிங் வரிசையால் அவரால் அதிக ரன் குவிக்க முடியவில்லை.
கங்குலி எடுத்த முடிவு
இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2005 ஒருநாள் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோனியை மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வைத்தார் கேப்டன் கங்குலி. அது அப்போது பெரிய பலனை தந்தது.
முதல் சதம் அடித்த தோனி
தோனி அந்தப் போட்டியில் தன் முதல் சர்வதேச சதம் அடித்து அசத்தினார். 123 பந்துகளில் 148 ரன்கள் குவித்தார். 15 ஃபோர் மற்றும் 4 சிக்ஸர் விளாசினார். அந்தப் போட்டி குறித்தும், தோனி குறித்தும் பேசினார் ஆஷிஷ் நெஹ்ரா.
தடுப்பது முடியாத காரியம்
"தோனி தன் துவக்க போட்டிகளில் நேரம் சிறப்பாக அமையவில்லை. ஆனால், அப்படி ஒரு உறுதியான மனிதருக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் அதை பயன்படுத்தினால், அதன் பின் அவரை தடுத்து நிறுத்துவது என்பது முடியாத காரியம்" என்றார் நெஹ்ரா.
நம்பிக்கை
"அசைக்க முடியாத நம்பிக்கை தான் தோனியின் பலம். அந்த இன்னிங்க்ஸ் அவர் முதல் ரத்தத்தை சுவைத்தது போல இருந்தது. அதன் பின் அவர் மூன்றாம் வரிசையில் அதிகம் ஆடவில்லை. ஆனால், அந்த நாளில் அவர் தன்னைப் பற்றி அறிவித்து விட்டார்." என்று தோனி பற்றி கூறினார் நெஹ்ரா.
நிரந்தர இடம் பிடித்த தோனி
தினேஷ் கார்த்திக், பார்த்திவ் பட்டேல் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்று வந்த அதே நேரத்தில் தான் தோனிக்கும் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்களை தாண்டி அணியில் நிரந்தர இடம் பிடித்தார். எந்த விஷயத்தில் அவர்களை தோனி ஓரங்கட்டினார் என்பது பற்றி கூறினார் நெஹ்ரா.
சிறந்த விக்கெட் கீப்பர் இல்லை
"தோனி அணிக்கு வந்த போது, அவர் சிறந்த விக்கெட் கீப்பராக இல்லை. அவருக்கு முன் விளையாடியவர்கள் அனைவரும் சிறப்பாக ஆடி இருந்தார்கள். அவர் ஒரு கிரண் மோரேவோ, நயன் மோங்கியாவோ இல்லை." என தோனியின் நிலை பற்றி கூறினார் நெஹ்ரா.
என்ன செய்தார் தோனி?
"தினேஷ் கார்த்திக், பார்த்திவ் பட்டேல் செய்யாத விஷயத்தை தோனி செய்தார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை முடிந்த வரை பயன்படுத்திக் கொண்டார். தோனி பார்ப்பதற்கு சிறந்த பேட்ஸ்மேனாக இல்லை. சிறந்த விக்கெட் கீப்பராக இல்லை. ஆனால், அவர் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருந்தார்." என தோனி முந்தைய விக்கெட் கீப்பர்களை ஓரங்கட்டிய ரகசியத்தை கூறினார் நெஹ்ரா.