நாளை துவக்கம்
ஐபிஎல் 2021 தொடர் நாளை ஜகஜோதியாக துவங்கவுள்ளது. கொரோனா வைரசையும் மீறி மிகுந்த பாதுகாப்புடன் ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் இந்த தொடர் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் அணி குறித்த பல்வேறு விஷயங்களை சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
சிஎஸ்கே குறித்து விஸ்வநாதன்
கடந்த சீசனில் அணியின் சில முக்கிய வீரர்களை தவறவிட்டதும் கொரோனா பாதிப்பு உள்ளிட்டவற்றால் சிஎஸ்கே சிறப்பாக செயல்பட முடியாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த முறை அணி பலமாக உள்ளதாகவும் 15 -20 நாட்களுக்கு பயிற்சி முகாம்களை நடத்தியுள்ளதாகவும் அதனால் இந்த முறை அணியின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சூப்பர் ரெய்னா
மேலும் ஜடேஜா இந்த சீசனில் தன்னுடைய பிட்னசை நிரூபித்து அணியில் இணைந்துள்ள நிலையில், அவரது செயல்பாடும் இந்த சீசனில் சிறப்பாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேபோல சுரேஷ் ரெய்னாவும் சையது முஸ்தாக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
2வது வீரர் ரெய்னா
சர்வதேச போட்டிகளில் விளையாடாவிட்டாலும் ஐபிஎல்லின் அதிக ரன்களை குவித்துள்ள இரண்டாவது வீரர் என்ற பெருமையை இன்றளவும் அவர் கொண்டுள்ளதை குறிப்பிட்டுள்ள விஸ்வநாதன், கடந்த 10 தினங்களாக அவர் சிறப்பான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் இந்த சீசனில் திறம்பட விளையாடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
வாய்ப்பில்லை என திட்டவட்டம்
இதேபோல கேப்டன் தோனி இந்த ஆண்டுடன் ஐபிஎல்லில் ஓய்வு அறிவிக்க வாய்ப்பில்லை என்று தான் கருதுவதாகவும் அதனால் புதிய கேப்டன் குறித்து எந்த திட்டமும் இல்லை என்றும் புதிய கேப்டனுக்கான தேடல் எதுவுமில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இதன்மூலம் அடுத்த ஆண்டும் சிஎஸ்கே கேப்டன் தோனிதான் என்பதை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். தோனி ரசிகர்கள் எல்லாருக்கும் இது இனிப்பான செய்திதானே?