ருத்ராஜ் கெய்க்வாட்
சி.எஸ்.கே இந்த அளவுக்கு சவாலான ஸ்கோரை எட்ட உதவியதற்கும், அணியை வெற்றி பெற வைத்ததற்கும் முழுக்க, முழுக்க காரணம் தொடக்க வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்தான். ஒரு கட்டத்தில் இந்த தொடரில் அசுர பார்மில் இருக்கும் பாஃப் டூப்ளசிஸ், சிறந்த ஆல்ரவுண்டர் மொயீன் அலி, ரெய்னா, கேப்டன் தோனி என்று 4 பேரும் அவசர கதியில் அவுட்டாகி வெளியேற சி.எஸ்.கே 24 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து என்னசெய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றது.
செய்து காட்டினார்
ஆனால் நம்பிக்கையிழந்து போன சி.எஸ்.கே வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் நம்பிக்கை ஒளி பாய்ச்சினார் ருத்ராஜ் கெய்க்வாட். தொடக்கத்தில் பிட்ச் வேற மாதிரி பயங்கரமாக இருந்தது. பந்து நன்கு எகிறி வந்தன. பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க சிரமப்பட்டனர். இந்த மாதிரி ஸ்லோ ஆடுகளங்களில் பொறுமை மிக அவசியம். தொடக்கத்தில் இரண்டு, மூன்று ஓவர்கள் பொறுமையாக சமாளித்து விட்டால், அதன்பிறகு பந்து பேட்டுக்கு அடிக்க வசதியாக வரும். நேற்று இதைத்தான் இரு அணிகளின் பேட்ஸ்மேன்களுக்கும் செய்து காட்டினார் ருத்ராஜ் கெய்க்வாட்.
பியூர் கிரிக்கெட்டிங் ஷாட்கள்
பொதுவாக கிரிக்கெட்டில் கவர் டிரைவ், ஸ்டிரைட் டிரைவ், புல் ஷாட் போன்றவை பார்க்க மிக அழகாக இருக்கும். இவையெல்லாம் பியூர் கிரிக்கெட்டிங் ஷாட்கள். மும்பை பவுலர்களுக்கு எதிராக ருத்ராஜ் கெய்க்வாட் அடித்த ஷாட்கள் எல்லாமே பியூர் கிரிக்கெட்டிங் ஷாட்கள்தான். கடைசி கட்டத்தில் ஏனோதானோ என்று அடிக்காமல் பியூர் டெக்னிக்கள் ஷாட்கள் மூலம் பவுண்டரிகளை திரட்டினார் ருத்ராஜ் கெய்க்வாட். அதுவும் டிரண்ட் போல்ட் வீசிய 19-வது ஓவரின் கடைசி பந்தில் யார்க்கராக வந்த பந்தை கணித்து அவர் ஸ்கொயர் லெக் திசையில் சிக்சருக்கு அனுப்பிய விதம் அவர் ஒரு நேர்த்தியான பேட்ஸ்மேன் என்பதை பறைசாற்றியது.
இதுதான் மிக சிறந்த இன்னிங்ஸ்
இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 58 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸசர்கள் மூலம் 88 ரன்கள் குவித்து சி.எஸ்.கே ரசிகர்கள் மனதில் சிம்மாசனம்போட்டு அமர்ந்து விட்டார் ருத்ராஜ் கெய்க்வாட். நான் இதுவரை விளையாடிய இன்னிங்சில், இதுதான் மிக சிறந்த இன்னிங்ஸ் என்று அவர் பெருமையுடன் கூறினார். '' விரைவில் விக்கெட்டுகள் இழுந்ததால் மிகவும் அழுத்தம் இருந்தது. முதலில் 130-140 ரன்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதன்பின்பு 150 ரன்களே சாத்தியமானது.
மஹி பாய்
மஹி பாய்(தோனி) சுற்றி இருக்கும்போது, சிஎஸ்கே நிர்வாகம் ஆதரவு கொடுக்கும்போது நாம் அதிகம் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த பிட்ச் பேட்டிங் செய்ய அவ்வளவு எளிதானது எல்ல; ஆரம்பத்தில் பந்து சீமிங்(வேகம்) மற்றும் ஸ்விங்கிங் ஆக இருந்ததால், ஸ்பின்னர்களுக்கு எதிராக அடிக்க வேண்டிய நிலை இருந்தது. அதன்பிறகு ஜட்டு(ஜடேஜா) வந்ததால் எனது திட்டம் எளிதானது. சமீபத்தில் இலங்கை பிட்சில் விளையாடியது, எனக்கு இங்கு மிகவும் உதவிகரமாக இருந்தது'' என்று ருத்ராஜ் கெய்க்வாட் கூறினார்.