ரசிகர்களுக்கு அனுமதி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தவிர்த்த மற்ற போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
23, 26 மற்றும் 28 தேதிகளில் தொடர்
இதேபோல அடுத்ததாக அகமதாபாத்தில் நடைபெறவுள்ள 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரிலும் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக வரும் மார்ச் 23, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.
ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் போட்டி
மகாராஷ்டிராவின் பூனாவில் இந்த போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் போட்டிகளை நடத்த முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளதாக மகாராஷ்டிரா கிரிக்கெட் கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் அறிவுறுத்தல்
மேலும் போட்டிகளை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு நடத்தவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளதாக கழகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் உதவிபுரிந்த முன்னாள் ஐசிசி, பிசிசிஐ மற்றும் எம்சிஏ தலைவர் சரத் பவாருக்கும் எம்சிஏ நன்றி தெரிவித்துள்ளது.