மும்பை: மும்பையில் இன்று நடந்த மகளிர் ஐபிஎல் டி-20 காட்சி ஆட்டத்தில், டிரையல்பிளேசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சூப்பர்நோவா அணி கடைசி பந்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான முதல் தகுதிச் சுற்று ஆட்டம் மும்பையில் நடக்கிறது.
அதற்கு முன், மகளிர் ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னோட்டமாக, ஒரு காட்சி போட்டி நடந்தது. இதில், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான டிரையல் பிளேசர்ஸ் அணியும், மிதாலி ராஜ் தலைமையிலான சூப்பர்நோவா அணியும் விளையாடின.
முதலில் பேட்டிங் செய்த டிரையல்பிளேசர்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. சூசி பேட்ஸ் 32, ஜெமிமா ரோட்ரிகுஸ் 25, தீப்தி சர்மா 21 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து ஆடிய சூப்பர்நோவா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டேனியேல் வயாட் 23, மிதாலி ராஜ் 22, ஹர்மன்பிரீத் கவுர் 21 ரன்கள் எடுத்தனர். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில், சூப்பர்நோவா திரில் வெற்றி பெற்றது.