இந்தியாவை வெல்லுமா ஆஸ்திரேலியா?
பெய்ன் தலைமையில் ஒரு சோக சம்பவம் கடந்த 2018-19 டெஸ்ட் தொடரில் நடந்தது. அதாவது ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த நாட்டு அணியை இந்தியா 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. 71 ஆண்டுகளில் சொந்த மண்ணில் எந்த டெஸ்ட் தொடரையும் இழக்காமல் இருந்த ஆஸ்திரேலியாவுக்கு அது பெரிய வடுதான். மறக்க முடியாத ஏமாற்றம்தான் அந்த தொடர் தோல்வி.
வார்னரும், ஸ்மித்தும் பலமே
அப்போது வார்னரும், ஸ்மித்தும் பந்தை சுரண்டிய விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் ஆகியிருந்தனர். தற்போது இருவரும் அணிக்குள் வந்து விட்டனர். இதில் ஸ்மித்துக்கு கேப்டனாக செயல்பட விதிக்கப்பட்டிருந்த தடையும் கூட நீங்கியுள்ளது. மீண்டும் அவர் கேப்டனாகும் தகுதியைுயும் பெற்றுள்ளார். ஆனால் டெஸ்ட் கேப்டனாக இருக்கும் டிம் பெய்னும் நன்றாகவே செயல்படுவதால் அவர் நீக்கப்படுவாரா என்பது சந்தேகம்தான்.
சிறப்பான ஆட்டம் காத்திருக்கு
இந்த நிலையில் இந்தியத் தொடர் குறித்து டிம் பெய்ன் கூறியுள்ளார். அவர் கூறுகையில், நிச்சயம் இது வித்தியாசமான அணிதான். அதேபோல இந்திய அணியும் வித்தியாசமாக இருக்க வாய்ப்புண்டு. இரு அணிகளுமே தரமான, தகுதியான அணிகள்தான். நிச்சயம் இந்தத் தொடரில் தரமான கிரிக்கெட்டை எதிர்பார்க்கலாம். இதற்கு முன்பு இருந்ததை விட இது சிறப்பான ஆட்டமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா -ஆஸ்திரேலியா ரைவல்ரி
இந்தியா -ஆஸ்திரேலியா கிரிக்கெட் என்பது ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஆஷஸ் தொடர் போலத்தான். ஒரு விதமான போட்டி இருக்கும். சூடு பறக்கும். கடைசியில் நல்ல கிரிக்கெட் கிடைக்கும். இந்தத் தொடரை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். வார்னரும், ஸ்மித்தும் இருக்கும்போது வேற லெவலில் ஆட்டம் இருக்கும். இருவரும் இணைந்து 15,000 ரன்களைக் குவித்துள்ளனர். அதேபோல மார்னஸ் லெபுசாக்னே வேறு இருக்கிறார். இவர்கள் இருக்கும்போது ரன்களுக்குப் பஞ்சமிருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவிடம் நல்ல பவுலர்கள் உள்ளனர்
இந்தியாவிடம் நல்ல பவுலர்கள் உள்ளனர். அதை மறுக்க முடியாது. ஆனால் இந்த 3 பேட்ஸ்மேன்களும் உலகின் எந்த தரமான பவுலர்களையும் எதிர்கொண்டு ரன் குவிக்கக் கூடிய வல்லமை பெற்றவர்கள் என்பதையும் நாம் மறக்கக் கூடாது. உலகின் டாப் 6 சிறந்த பேட்ஸ்மேன்களில் எங்களது வீரர்கள் 3 பேர் என்பது எங்களுக்கு பலமானதுதான். கூடவே மாத்யூ வேட் இருக்கிறார். டிராவிஸ் இருக்கிறார். நிறைய மாறியிருக்கிறார் டிராவிஸ். எனவே இது அபாரமான தொடராக இருக்கும். சந்தகேமே இல்லை என்று கூறியுள்ளார் பெய்ன்.