சாதனைகளின் சொந்தக்காரர்
இளம் வீரர் பிரித்வி ஷா, கிரிக்கெட் உலகத்திற்குள் நுழைந்த சிறிது காலங்களிலேயே கவனிக்கத்தக்க பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். கடந்த 2017ல் நடைபெற்ற ரஞ்சிக்கோப்பையில் இவரது பயணம் துவங்கியது. ராஜ்காட்டில் தமிழ்நாடு அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் தன்னுடைய முதல் சதத்தை வெற்றிகரமாக துவக்கினார் பிரித்வி.
தடை செய்த சோதனை
தொடர்ந்து துலீப் கோப்பை தொடரில் சதம், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம், கடந்த 2018 அன்டர் 19 அணியின் கேப்டன் என தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த இவரது பயணத்தில் ஊக்கமருந்து சோதனையும், அதன் காரணமாக 8 மாதங்கள் தடையும் சோதனைகாலமாக அமைந்தது.
நியூசிலாந்து தொடரில் விளையாட்டு
இதையடுத்து இந்த சோதனை காலத்திலிருந்து மீண்டு வந்த பிரித்வி, உள்ளூர் போட்டிகளில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்று, விளையாடினார். இதில் இவரது ஆட்டம் சிறப்பாக இல்லாவிட்டாலும், இடைவெளி காரணமாக அவர் அவ்வாறு விளையாடியதாகவும், தொடர்ந்து சிறப்பாக விளையாடுவார் என்றும் கேப்டன் கோலி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
டார்ச்சராக இருப்பதாக விளக்கம்
இதனிடையே, கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்ட தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் பிரித்வி ஷா விளையாடியிருக்க வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் அதை தடுத்துவிட்டதால், அவர் தற்போது வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார். இந்நிலையில், இவ்வாறு இருப்பது டார்ச்சராக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுவும் கடந்து போகும்
ஆயினும் இந்த நேரத்தில் மக்கள் பாதுகாப்பு முக்கியம் என்று கூறியுள்ள பிரித்வி ஷா, இந்த நெருக்கடி நேரத்தில் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை புரிந்துள்ளதாகவும், இதுவும் கடந்து போகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடி நிலை கடந்தவுடனே ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.