இஸ்லாமாபாத் : சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து மனிதர்கள் அனைவரும் ஒன்றாக போராட வேண்டிய தருணம் இது என்று பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள சோயிப் அக்தர், இந்த நெருக்கடியான சூழ்நிலையில், பொருட்களை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல், மனிதனாக நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
மதம் உள்ளிட்டவற்றில் அடங்காமல், மனிதத்தன்மையுடன் செயல்பட்டு, கொரோனாவை வெற்றி கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சர்வதேச அளவில் 14,300 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பல்வேறு நாடுகளும் முடுக்கி விட்டுள்ளன.
இந்நிலையில், சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க, மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு, அதை எதிர்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். மதம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு சக மனிதர்களுக்கு உதவும் போக்கு ஏற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வைரஸ் மேலும் தொற்றாமல் தடுப்பதற்காக பல நாடுகள், மக்கள் நடமாட்டத்திற்கு தடை போட்டுள்ளதை சுட்டிக் காட்டிய அக்தர், இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை பதுக்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில், இன்னும் 3 மாதத்திற்கு பிறகு வாழ்வதற்கான என்ன உத்தரவாதம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினக்கூலிகள் எவ்வாறு தங்களது குடும்பத்தினருக்கு உணவளிப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்து, முஸ்லிம் இவற்றிற்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் நடந்துகொள்ள வேண்டிய தருணம் இது என்றும் கூறியுள்ளார். அவர்கள் வாழ்வதற்கு தேவையான நிதியை திரட்டி இந்த இக்கட்டான சூழலில் அவர்கள் வாழ்வதற்கு நிதி திரட்டி, உதவி செய்ய வேண்டியது அவசியம் என்றும் செல்வந்தர்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பாகிஸ்தானில் இதுவரை 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் உயிழந்துள்ளனர்.