தொடரிலிருந்து வெளியேறிய ஆர்சிபி
ஐபிஎல் 2020 சீசனில் துவக்கம் முதல் சிறப்பாக விளையாடி வந்தது ஆர்சிபி அணி. இந்த முறை கோப்பையை வெல்லும் என்று பலரும் ஆரூடம் கூறினர். ஆனால் கடந்த 5 லீக் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்த அந்த அணி முந்தைய வெற்றிகளை கொண்டு பிளே-ஆப் சுற்றிற்கு முன்னேறியது. ஆயினும் எலிமினேட்டர் சுற்றில் தோல்வியை சந்தித்துள்ளது.
தோல்வியுற்ற ஆர்சிபி
டெல்லி கேபிடல்ஸ் அணியை எலிமினேட்டர் சுற்றில் கடந்த வெள்ளிக்கிழமை எதிர்கொண்ட ஆர்சிபி, துவக்கம் முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முக்கியமான இந்த போட்டியில் வெறுமனே 131 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
பொறுப்பிலிருந்து விலக வேண்டும்
இந்த முறை ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்வோம் என்று விராட் கோலி உள்ளிட்ட அணி வீரர்கள் மிகவும் உற்சாகமாக தெரிவித்து வந்த நிலையில், இந்த முறையும் அந்த அணிக்கு கோப்பை வெறும் கனவாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக அணியின் கேப்டனாக உள்ள விராட் கோலி அந்த பொறுப்பில் இருந்து விலக வேண்டிய நேரம் வந்துள்ளதாக முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
கோலி பதவி விலக வேண்டும்
கடந்த எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்துள்ளதற்கு தான் தான் பொறுப்பு என்று வெளிப்படையாக கோலி தெரிவித்து தன்னுடைய கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 8 ஆண்டுகள் ஒரே அணியின் கேப்டனாக இருந்து அவர் கோப்பையை பெற்று தராதது போல வேறு எந்த அணியிலாவது நடக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.