நத்தம் : 2019 டிஎன்பிஎல் தொடரின் 20வது போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ்.
திருச்சி அணியின் முரளி விஜய் அதிரடியாக ஆடி 99 ரன்கள் குவித்தார். மறுபுறம், திண்டுக்கல் அணியின் ஜெகதீசன் சதம் அடித்து, தன் அபார பேட்டிங்கால் தனி ஆளாக திண்டுக்கல் அணியை வெற்றி பெறச் செய்தார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணிக்கு முகுந்த், முரளி விஜய் அபார துவக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 106 ரன்கள் சேர்த்தது.
முகுந்த் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். கணபதி 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். முரளி விஜய் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 1 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். 20 ஓவர்களில் திருச்சி அணி 3 விக்கெட்கள் இழந்து 178 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் அணியின் கௌஷிக் 2 விக்கெட்கள் எடுத்தாலும், 3 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்து மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார்.
அடுத்து சேஸிங் செய்த திண்டுக்கல் அணியில் ஜெகதீசன் மட்டுமே அணியை தாங்கிப் பிடித்தார். ஹரி நிஷாந்த் 21, சதுர்வேத் 20, அஸ்வின் 1, விவேக் 29, சுமந்த் ஜெயின் 0 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
ஜெகதீசன் 60 பந்துகளில் 105 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 12 ஃபோர், 4 சிக்ஸ் அடித்த அவர் 19.1 ஓவரில் திண்டுக்கல் அணியின் வெற்றியடைய முக்கிய காரணமாக இருந்தார். திண்டுக்கல் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தியது.