காரைக்குடி துவக்கம்
முதலில் பேட்டிங் செய்த காரைக்குடி அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி அளித்தார் துவக்க வீரர் ஆதித்யா. அவர் வெறும் 1 ரன் எடுத்து முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய சூர்யபிரகாஷ் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஸ்ரீகாந்த் அனிருத்தா அரைசதம்
கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருத்தா மற்றும் ஸ்ரீனிவாசன் இணைந்து சிறப்பாக பேட்டிங் செய்தனர். அனிருத்தா மூன்று சிக்ஸர், ஏழு ஃபோர் உட்பட 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாஃப்னா 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.
ராஜ்குமார் அதிரடி
ஷாஜஹான் 1 ரன் எடுத்தார். ஸ்ரீனிவாசன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி நேரத்தில் களமிறங்கிய ராஜ்குமார் ஸ்கோரை உயர்த்த வேண்டி கடைசி இரண்டு ஓவர்களில் மூன்று சிக்ஸ் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் காரைக்குடி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
விக்னேஷ் வாரி இறைத்தார்
திருச்சி அணி சரவண் குமார் 17வது ஓவரில் எடுத்த 2 விக்கெட் உட்பட 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். விக்னேஷ் 4 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். இவர் 20வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் எடுக்கப்பட்டது.
சேஸிங்கில் சறுக்கல்
அடுத்து திருச்சி அணி 172 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி சேஸிங் செய்யத் துவங்கியது. அரவிந்த் 13, ஆதித்யா பரூவா 16, மாருதி ராகவ் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 12வது ஓவரில் 3 விக்கெட்கள் இழந்து 75 ரன்கள் எடுத்து இருந்தது திருச்சி அணி. அப்போது ஓவருக்கு 12 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.
முரளி விஜய் அதிரடி ஆட்டம்
முரளி விஜய் துவக்க வீரராக இறங்கி ஆடினார். அவர் 5 ரன்கள் எடுத்து இருந்த போது கொடுத்த எளிய கேட்ச்சை ராஜ்குமார் தவற விட்டு இருந்தார். அதை பயன்படுத்திக் கொண்ட விஜய், முதலில் நிதானம் காட்டினார், பின்னர், அதிரடியாக ஆடத் துவங்கி காரைக்குடி அணியை மிரள வைத்தார்.
2 விக்கெட்
முரளி விஜய் 56 பந்துகளில் 81 ரன்கள் ரன்கள் அடித்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடி வந்த கணபதி 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், சாய் கிஷோர், மணி பாரதி களத்தில் இருந்தனர்.
கடைசி ஓவர்
ராஜ்குமார் வீசிய கடைசி ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுக்க போட்டி டை ஆனது. டிஎன்பிஎல் தொடரின் வரலாற்றில் இது நான்காவது டை ஆகும். காரைக்குடி அணியின் ராஜ்குமார் ஓவருக்கு 11.75, சாம் ஓவருக்கு 10.50 ரன்களை வாரி வழங்கியதே இந்தப் போட்டி டை வரை செல்ல முக்கிய காரணம். இதை அடுத்து போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.
திருச்சி 11 ரன்கள்
சூப்பர் ஓவரில் திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது. முரளி விஜய், கணபதி பேட்டிங் செய்தனர். சாம் பந்து வீசினார். முரளி விஜய் ஒரு சிக்ஸ் மட்டும் அடிக்க, திருச்சி அணி 11 ரன்கள் சேர்த்தது.
காரைக்குடி காளை வெற்றி
அடுத்து காரைக்குடி காளை அணியில் கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருத்தா, ராஜ்குமார் களமிறங்கினர். மூன்றாவது மற்றும் நான்காவது பந்தில் சிக்ஸ் அடித்த அனிருத்தா காரைக்குடி அணியை வெற்றி பெறச் செய்தார். திருச்சி வாரியர்ஸ் அணி போராடி தோல்வி அடைந்தது.