நத்தம் : 2019 டிஎன்பிஎல் டி20 தொடரின் நான்காவது லீக் போட்டியில் கோவை கிங்ஸ் அணி, காஞ்சி வீரன்ஸ் அணியை 8 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
காஞ்சி வீரன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 150 ரன்கள் எடுத்தது. அப்போது அது கடினமான இலக்கு என்பது போன்ற தோற்றம் தான் இருந்தது. ஆனால், காஞ்சி அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்ததை அடுத்து, கோவை கிங்ஸ் மிக எளிதாக வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இரண்டு ஓவர்களில் காஞ்சி அணியின் துவக்க வீரர்களை வெளியேற்றியது கோவை. காஞ்சி அணி வெறும் 1 ரன்னுக்கு 2 விக்கெட்கள் இழந்து போட்டியைத் துவக்கியது.
எனினும், அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக ஆடினர். ரன் ரேட் 6ஐ ஒட்டி இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டனர். கேப்டன் பாபா அபரஜித் 29, லோகேஷ்வர் 51, சஞ்சய் யாதவ் 31 ரன்கள் சேர்த்தனர்.
18 ஓவர்களில் 118 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது காஞ்சி அணி. கோவை அணியின் மணிகண்டன் வீசிய 19வது ஓவரில் பிரான்சிஸ் அதிரடியாக ஆடி தெறிக்க விட்டார். மூன்று சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்த அவர் 7 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார்.
18வது ஓவரில் மட்டும் 24 ரன்கள் எடுத்தது காஞ்சி அணி. அந்த ஓவரில் பிரான்சிஸ் ஒரு கேட்ச் கொடுத்தார். அதை தவறவிட்டார் அஜித் ராம். அதன் பின் 10 ரன்கள் கூடுதலாக சேர்த்து ஆட்டமிழந்தார் பிரான்சிஸ். காஞ்சி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது.
கோவை அணியின் மணிகண்டன் ஒரே ஓவரில் 24 ரன்கள் கொடுத்ததால், 4 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். அஜித் ராம், ரங்கராஜன் ஆகிய இருவரும் ஓவருக்கு 9 ரன்கள் வாரி இறைத்து இருந்தனர்.
அடுத்து சேஸிங் செய்யத் துவங்கிய கோவை கிங்ஸ் அணிக்கு கேப்டன் அபினவ் முகுந்த், ஷாரூக் கான் மின்னல் வேகத் துவக்கம் அளித்தனர். பவர்பிளேவின் ஆறு ஓவர்களில மட்டுமே 79 ரன்கள் சேர்த்தது கோவை. ஷாரூக் கான் 21 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து ரஞ்சன் பால் 1 ரன் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார்.
அபினவ் முகுந்த் கடைசி வரை களத்தில் நின்று அரைசதம் கடந்து 70 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெறச் செய்தார். அனிருத் சீதா ராம் 22 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.
15.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது கோவை கிங்ஸ் அணி. காஞ்சி அணியில் ஏழு பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் எந்த பயனும் ஏற்படவில்லை. அந்த அணி 16 வைடுகள் கொடுத்தும், பீல்டிங்கில் சொதப்பியதும் கோவை அணி எளிதாக வெற்றி பெற வழி வகுத்தது.