திருநெல்வேலி : 2019 டிஎன்பிஎல் லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மதுரை பாந்தர்ஸ் அணியின் பேட்டிங் அதிரடியாக அமையவில்லை. ஒரு பேட்ஸ்மேன் கூட அதிரடியாக ஆடவில்லை. அந்த அணி 20 ஓவர்களில் மொத்தமே மூன்று சிக்ஸர்கள் தான் அடித்தது.
பந்துவீச்சில் ஓரளவு நம்பிக்கை அளித்த மதுரை 19வது ஓவரில் 19 ரன்கள் கொடுத்து வெற்றியை கோட்டை விட்டது. காஞ்சி அணியின் சிலம்பரசன் 5 விக்கெட்கள் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்தப் போட்டியில் மதுரை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் சந்திரன் மட்டுமே சிறப்பாக ஆடி 39 ரன்கள் எடுத்தார். கௌஷிக் 22, சரத் ராஜ் 17, தன்வர் 19 ரன்கள் எடுத்தனர். மற்ற ஆறு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் தான் ரன் எடுத்தனர்.
20 ஓவர்களில் மதுரை அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. சிலம்பரசன் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து அபார பந்துவீச்சில் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். சதீஷ், சுதீஷ் ஓவருக்கு ஆறு ரன்களுக்கும் குறைவாக கொடுத்து அசத்தினர்.
அடுத்து சேஸிங் செய்த காஞ்சி வீரன்ஸ் அணிக்கு விஷால் வைத்யா 6, சித்தார்த் 14 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான துவக்கம் அளித்தனர். எனினும், அடுத்து வந்த பாபா அபாரஜித் 44, லோகேஷ்வர் 51*, சதீஷ் 22* ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். கடைசி 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது 19வது ஓவரை சந்தித்த சதீஷ் அதிரடி காட்ட, அதே ஓவரில் 19 ரன்கள் எடுத்து காஞ்சி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்கள் அள்ளிய சிலம்பரசன் ஆட்ட நாயகன் விருது வென்றார். மதுரை பாந்தர்ஸ் அணி தான் ஆடிய 3 போட்டிகளில் 2 தோல்விகளை சந்தித்துள்ளது. காஞ்சி வீரன்ஸ் அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.