நத்தம் : 2019 டிஎன்பிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி, கோவை கிங்ஸ் அணியை அபாரமாக வீழ்த்தியது.
கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சில் கோட்டை விட்டது. சேஸிங்கில் ஓரளவு போராடினாலும், அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.
மதுரை பாந்தர்ஸ் அணியின் அருண் கார்த்திக் அதிரடி ஆட்டம் ஆடி சதம் அடித்து அசத்தினார். அதுவே மதுரை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்தப் போட்டியில் கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அருண் கார்த்திக் - சரத் ராஜ் மதுரை அணிக்கு துவக்கம் அளித்தனர். சரத் 20 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஆதித்யா கிரிதர் 14, மிதுன் 1 ரன் மட்டுமே எடுத்தனர். அதிரடி ஆட்டம் ஆடிய அருண் கார்த்திக் 56 பந்துகளில் சதம் கடந்தார். 18வது ஓவர் வரை களத்தில் நின்ற அவர் 61 பந்துகளில் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 13 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து அசத்தினார்.
கடைசி ஓவர்களில் கௌஷிக்-உம் அதிரடி காட்டினார். அவர் 23 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் மட்டும் மதுரை அணி 23 ரன்கள் குவித்தது. 20 ஓவர்களில் மதுரை 5 விக்கெட் இழந்து 195 ரன்கள் குவித்தது.
கோவை அணியின் ஜெகன்நாத் ஸ்ரீனிவாஸ் 4 ஓவர்களில் 50 ரன்களும், அந்தோணி தாஸ் 4 ஓவர்களில் 53 ரன்களும் கொடுத்து அதிர்ச்சி அளித்தனர். அடுத்து 196 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடியது கோவை கிங்ஸ் அணி.
கோவை அணியில் முகுந்த் 38 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். மற்ற பேட்ஸ்மேன்களில் சிலர் 15, 20 ரன்கள் மட்டுமே குவித்தாலும் கோவை அணியின் ஸ்கோர் உயர்ந்து வந்தது. கடைசி நான்கு ஓவர்களில் 62 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை சென்றது.
எனினும், 17வது ஓவரில் 3 விக்கெட்கள் இழந்து 1 ரன் மட்டுமே எடுத்து தன் தோல்வியை உறுதி செய்தது கோவை அணி. 10வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விக்னேஷ், நடராஜன் அதிரடி ஆட்டம் ஆடினர். விக்னேஷ் 26 ரன்களும், நடராஜன் 11 ரன்களும் எடுத்தனர். இந்த ஜோடி 37 ரன்கள் குவித்து டிஎன்பிஎல் வரலாற்றில் 10வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையை செய்தது.
கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. மதுரை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோவை அணியின் சேஸிங் போராட்டம் ஓரளவு சிறப்பாக இருந்தாலும், பந்துவீச்சு படு மோசமாக இருந்தது. மாற்று பந்துவீச்சாளர்கள் இல்லாததும், கடைசி ஓவர்களில் ரன்களை வாரி இறைத்ததும் அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.