நத்தம் : சிக்ஸர் மழைக்கு நடுவே தூத்துக்குடி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
2019 டிஎன்பிஎல் தொடரில் தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் - கோவை கிங்ஸ் இடையே ஆன லீக் போட்டி நத்தம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டி மழையின் காரணமாக ஒரு அணிக்கு 13 ஓவர்கள் என்ற அளவில் குறைக்கப்பட்டு தாமதமாக துவங்கியது.
போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரின் இரண்டாம் பந்திலேயே செந்தில் நாதன் விக்கெட் எடுத்து கோவை கிங்ஸ் அட்டகாசமாக துவக்கியது. எனினும், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
துவக்க வீரர் ஸ்ரீனிவாசன் மற்றும் கேப்டன் சுப்ரமணிய சிவா அதிரடித் தாக்குதல் நடத்தினர். ஸ்ரீனிவாசன் 4 சிக்ஸர்களுடன் 11 பந்துகளில் 31 ரன்களும், சுப்ரமணிய சிவா 5 சிக்ஸர்களுடன் 21 பந்துகளில் 44 ரன்களும் எடுத்தனர்.
அதன்பின் வந்த ராஜகோபால் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார். இடையே அபிஷேக் 13 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் சரவணன் 12 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார், தூத்துக்குடி அணி 13 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழந்து 155 ரன்கள் எடுத்தது.
தூத்துக்குடி அணி தன் இன்னிங்க்ஸில் 15 சிக்ஸர்கள் அடித்து, டிஎன்பிஎல் வரலாற்றில் ஒரே இன்னிங்க்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையை நிகழ்த்தியது. அந்தோணி தாஸ் 3, விக்னேஷ் 2 விக்கெட்களும் எடுத்தனர்.
அடுத்து சேஸிங் செய்யத் துவங்கிய கோவை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் இரண்டு ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்களை இழந்தது கோவை அணி. ஷாரூக் கான் 8, முகுந்த் 0, அனிருத் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க 13 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது கோவை அணி. ஆஷிக் 19 ரன்கள் சேரத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஸ்ரீநாத், அந்தோணி தாஸ் போட்டியை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். ஸ்ரீநாத் முதலில் ஒரு ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து போட்டியின் போக்கை மாற்றினார். அதன் பின் அந்தோணி தாஸ் வெளுத்துக் கட்டினார்.
ஏழு சிக்ஸர்கள் அடித்த அவர், 26 பந்துகளில் 63 ரன்கள் குவித்து 9 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் ஸ்ரீநாத் ரன் அவுட் ஆனார். கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் பந்தில் ரங்கராஜன் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் தோல்வியை ஒப்புக் கொண்டாலும் கோவை கிங்ஸ் அணியின் ஜெகநாத் ஸ்ரீநிவாஸ் கடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸ் அடித்தார். 13 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 147 ரன்கள் எடுத்து, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது கோவை கிங்ஸ்
இந்தப் போட்டியில் 30 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு, டிஎன்பிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. மேலும், ஆறு பந்துகள் சிக்ஸர்களால் காணாமல் போனது. அதுவும் புதிய சாதனையாக அமைந்தது.