மூன்று ஆண்டுகள் கழித்து..
கடந்த மூன்று டிஎன்பிஎல் தொடரிலும் விஜய் ஷங்கர் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. காயம் மற்றும் இந்தியா ஏ அணிக்காக ஆடியது என சில கரணங்களால் முன்னணி தமிழக வீரராக இருந்தும் அவரால் டிஎன்பிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து இந்த தொடரில் ஆடும் வாய்ப்பை பெற்றார்.
கடைசி லீக் போட்டி
மூன்று தொடர்கள் கழித்து வாய்ப்பு பெற்றாலும், இந்த ஆண்டும் சேப்பாக் அணியின் கடைசி லீக் போட்டியில் தான் களமிறங்கினார் விஜய் ஷங்கர். இதற்கு காரணம் அவருக்கு உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்டு இருந்த காயம் தான் என கூறப்படுகிறது.
முதல் பந்தில் விக்கெட்
இந்தப் போட்டியில், சேப்பாக் அணி நிர்ணயித்த 128 ரன்கள் இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது தூத்துக்குடி அணி. முதல் ஓவரை விஜய் ஷங்கர் வீசினார். தான் வீசிய முதல் பந்திலேயே ஆகாஷ் சிவன் விக்கெட்டை வீழ்த்தினார்.
உலகக்கோப்பையில் நடந்தது
உலகக்கோப்பை தொடரில் முதன் முதலாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக பந்து வீசினார். அப்போதும் தன் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தி இருந்தார். அதே போல, டிஎன்பிஎல் தொடரில் தன் அறிமுகப் போட்டியில் முதல் பந்தில் விக்கெட் எடுத்து அசத்தினார்.
பேட்டிங் பார்ம் அவுட்
பந்துவீச்சில் 3.5 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். ஆனால், பேட்டிங்கில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார் விஜய். உலகக்கோப்பை தொடரிலும் பேட்டிங்கில் சொதப்பிய அவர், மீண்டும் ஒருமுறை தன் பேட்டிங்கில் சொதப்பி இருக்கிறார்.