எல்லாம் செம
இத்தொடரில், சேலம் ஸ்பார்டன்ஸ் (Salem Spartans), சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (Chepauk Super Gillies), லைக்கா கோவை கிங்ஸ் (Lyca Kovai Kings), திண்டுக்கல் டிராகன்ஸ் (Dindigul Dragons), ரூபி திருச்சி வாரியர்ஸ் (Ruby Trichy Warriors), திருப்பூர் தமிழன்ஸ் (Tiruppur Tamizhans), மதுரை பாந்தர்ஸ் (Madurai Panthers) மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் (Nellai Royal Kings) என்று எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
இரவு 7.30 மணிக்கு
இந்தநிலையில், டிஎன்பிஎல் தொடர் நேற்று (ஜூன்.19) சேப்பாக் ஸ்டேடியத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் (Lyca Kovai Kings) மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் (Salem Spartans) அணிகள் மோதின. நேற்று இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் போட்டி தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக, ரசிகர்கள் யாரும் ஸ்டேடியத்தில் அனுமதிக்கப்படவில்லை.
சூடுபிடித்த ஆட்டம்
இதில், டாஸ் வென்ற சேலம் அணி, முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. லைக்கா கோவை கிங்ஸ் அணியில் கங்கா ஸ்ரீதர் ராஜு மற்றும் கவின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ராஜு 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அவுட்டாக, விக்கெட் கீப்பர் கவின் 41 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து டெஸ்ட் ஆடிவிட்டுச் சென்றார். இதற்கு பிறகு தான் ஆட்டமே சூடுபிடித்தது.
பறந்த சிக்ஸர்கள்
ஒன் டவுன் வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் சும்மா சுழற்றி சுழற்றி விளாச ஆரம்பித்தார். 43 பந்துகளில் 87 ரன்களை விளாசினார். இதில், 8 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். கோவை அணி 18 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. சென்னையில் கடந்த நான்கு நாட்களாகவே மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. அதுவும் இடி மின்னலுடன் வெளுத்து வருகிறது. அதன் நீட்சியாக நேற்று மழை மீண்டும் ஆட்டத்தைப் போட, அருமையான மேட்ச் ஒன்று வீணாய் போனது. அதன்பிறகு கடைசி வரை போட்டியை தொடங்கவே முடியவில்லை. இதனால், முடிவு ஏதுமின்றி ஆட்டம் கைவிடப்பட்டது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இன்று (ஜுலை.20) நடக்கும் ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன. அதே சேப்பாக் ஸ்டேடியத்தில் இந்த போட்டியும் நடைபெறுகிறது. இன்றும் மழை பெய்து ஆட்டத்தை நாசம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.