வான வேடிக்கை
டாஸ் வென்ற திருச்சி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பாபா அபராஜித் மற்றும் ஐபிஎல் நட்சத்திரம் சஞ்சய் யாதவ் 3வது விக்கெட்டிற்கு கைகோர்த்தனர். ஆரம்பத்தில் சற்று நிதானத்தை கடைப்பிடித்த இந்த கூட்டணி, அதன் பின் கோவை மண்ணில் தங்களின் வானவேடிக்கையை காட்டியது
201 ரன்கள் பார்ட்னர்ஷிப்
இந்த சீஸனில் மட்டும் நெல்லை அணி மூன்று முறை 100 ரன்களுக்கும் மேலான பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளது. அந்த மூன்றிலும் சஞ்சய் யாதவின் பங்களிப்பு இருந்துள்ளது. அதோடு தமிழ்நாடு பிரீமியர் லீக் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பை அபராஜித் மற்றும் சஞ்சய் யாதவ் கூட்டணி 101 பந்துகளில் 201 ரன்கள் விளாசி சாதனை படைத்தது. இதற்கு முன் ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் ஜோடி குவித்த 161 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை இந்த கூட்டணி இன்று முறியடித்துள்ளது
19 சிக்சர்கள்
ஒரு முனையில் சஞ்சய் யாதவ் பட்டையக்கிளப்ப மறுமுனையில் பாபா அபராஜித் தனது மூன்றாவது அரைசதத்தை அடித்தார். ஒட்டுமொத்தமாக, நெல்லை ராயல் கிங்ஸ் இந்த வருட டி.என்.பி.எல்லில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற தங்களின் முந்தைய சாதனையை இன்று அவர்களே முறியடித்தனர் மற்றும் அதிக சிக்ஸர்களை அடித்த அணி என்ற புதிய சாதனையையும் இந்தப் போட்டியில் நெல்லை அணி(19 சிக்ஸர்கள்) நிகழ்த்தியது
இமாலய இலக்கு
இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து நெல்லை ராயல் கிங்ஸ் 236 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் சஞ்சய் யாதவ் 55 பந்துகளில் 9 சிக்ஸர்களுடன் 103*ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நீடிக்க, அவருக்கு பக்கபலமாக நின்ற பாபா அபராஜித் 48 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 92* ரன்கள் விளாசி அவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.