டிஎன்பிஎல் சர்ச்சை
கடந்த 2019 டிஎன்பிஎல் டி20 தொடர் முடிந்த உடன் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான பேச்சுக்கள் வலம் வந்தன. சில வீரர்கள், பயிற்சியாளர் ஒருவர் மேட்ச் பிக்ஸிங் வலையில் சிக்கி இருக்கலாம் என கூறப்பட்டது.
பிசிசிஐ விசாரணை
அதைத் தொடர்ந்து பிசிசிஐ விசாரணை துவங்கியது. பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரி அஜித் சிங் இந்த மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை செய்து வந்தார்.
அதிர வைத்த கங்குலி
அதன் பின், டிஎன்பிஎல் தொடர்பாக எந்த செய்தியும் வெளியாகாத நிலையில், கங்குலி சில நாட்கள் முன்பு இரு டிஎன்பிஎல் அணிகள் தடை செய்யப்பட்டதாக ஒரு தகவலைக் கூறி பரபரப்பை கிளப்பினார்.
டிஎன்பிஎல் மறுப்பு
ஆனால், அது உண்மை இல்லை என தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது மிகப் பெரிய அளவில் பந்தயம் நடந்தது குறித்து வேறு ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அந்த தகவல்
கடந்த சீசன் டிஎன்பிஎல் தொடரில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - மதுரை பாந்தர்ஸ் இடையே நடந்த போட்டியின் போது மிகப் பெரிய தொகைக்கு விளையாட்டுகளில் பந்தயம் கட்டும் இணையதளமான பெட்பேர்-இல் (Betfair) பந்தயம் கட்டப்பட்டுள்ளது.
225 கோடி பந்தயம்
சுமார் 225 கோடி அளவுக்கு அந்த தளத்தில் பந்தயம் கட்டப்பட்டுள்ளது. ஒரு உள்ளூர் டி20 லீக் போட்டிக்கு இத்தனை பெரிய தொகை கட்டப்பட்டதை அடுத்து அந்த இணையதளம் உஷாராகி இருக்கிறது.
பந்தயம் நிறுத்தம்
அதன் பின் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி ஆடிய போட்டிகளுக்கு பந்தயம் பெறுவதை அந்த இணையதளம் நிறுத்தி உள்ளது. இந்த தகவல் பிசிசிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இருவர் நீக்கம்
டிஎன்பிஎல் நியமித்த விசாரணைக் குழுவின் அறிக்கையின்படி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் இரு உரிமையாளர்கள் டிஎன்பிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், எந்த அணியும் தடை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கைது நடவடிக்கை
டிஎன்பிஎல் மட்டுமில்லாது, கர்நாடகா பிரீமியர் லீக் தொடரிலும் பெரிய அளவில் மேட்ச் பிக்ஸிங் நடந்துள்ளதாக வந்த தகவலை அடுத்து ஒரு அணியின் கேப்டன் மற்றும் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
லீக் தொடர்கள் குழப்பம்
இந்த இரு தொடர்கள் மட்டுமில்லாது சையது முஷ்டாக் அலி தொடர், மும்பை டி20 லீக் உள்ளிட்ட உள்ளூர் டி20 தொடர்களிலும் மேட்ச் பிக்ஸிங் செய்யும் புக்கிகள் வீரர்களை தொடர்பு கொண்டதாக தெரிகிறது. இந்திய அளவிலான டி20 தொடர்கள் அனைத்துமே மேட்ச் பிக்ஸிங் புகாரால் குழப்பத்தில் உள்ளது.