டிஎன்பிஎல் தொடர்
தமிழ்நாடு பிரீமியர் லீக் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அப்போதைய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தொடங்கி வைத்த தொடர் இது. தமிழக கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது இந்த தொடர்.
நட்சத்திர வீரர்கள்
இந்த தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய அணி வீரர்களான அஸ்வின், முரளி விஜய், விஜய் ஷங்கர், வாஷிங்க்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் பங்கு பெற்று இருப்பதால் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
நேரலை ஒளிபரப்பு
மேலும், ஒரு மாநிலத்தை சேர்ந்த டி20 தொடர் என்றாலும் இந்த தொடர் இந்தியா முழுவதும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியால் நேரலை செய்யப்பட்டு வருகிறது. அதனால், தமிழகத்தை தாண்டியும் பலரும் இந்த தொடரை பார்த்து வருகிறார்கள்.
முதல் சர்ச்சை
கடந்த மூன்று ஆண்டுகளாக பெரிய சர்ச்சைகள் இன்றி நடந்து வந்த இந்த தொடரில் முதல் சர்ச்சையாக இந்த ஆண்டு டிஎன்பிஎல் இறுதிப் போட்டி துவங்க சில நிமிடங்கள் இருக்கும் போது, காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளரும், முன்னாள் இந்திய வீரருமான விபி சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்த சர்ச்சை
அந்த விஷயம் குறித்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்த சர்ச்சைக்கு என்ன காரணம் என தெரியும் முன்னரே, அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது. அதுவும் மேட்ச் பிக்ஸிங் எனும் பூதாகரமான பிரச்சனை.
மேட்ச் பிக்ஸிங் புகார்
முதலில் சில வீரர்கள் தங்களை சிலர் மேட்ச் பிக்ஸிங் செய்ய தொடர்பு கொண்டதாக பிசிசிஐ-யிடம் கூறி இருக்கிறார்கள். அதை தொடர்ந்து சில வீரர்களிடம் விசாரணை செய்து வருகிறது பிசிசிஐ. இன்னும் உரிமையாளர்களை விசாரிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஒரு அணியே விலை போனதா?
இதன் பின்னணியில் சில முக்கிய விஷயங்கள் அதிர வைப்பதாக உள்ளது. ஒரு அணியையே கொல்கத்தா மற்றும் குஜராத் பகுதிய சேர்ந்த புக்கி-கள் விலை பேசி விட்டதாக கூறப்படுவது, நம்ப முடியாத விஷயமாக உள்ளது.
அணியையே முடிவு செய்கிறார்கள்
மேலும், அந்த அணியில் எந்த வீரர்கள் இடம்பெற வேண்டும் என்பது வரை அவர்கள் தான் முடிவு செய்வதாகவும் வந்துள்ள தகவல் இன்னும் அதிர்ச்சியாக உள்ளது. இது பற்றி பிசிசிஐ மேலும் விசாரணை செய்து வருவதாகவும், கூடிய விரைவில் காவல்துறையில் இந்த விவகாரம் குறித்து புகார் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
பணப் பரிமாற்றத்தில் பிரச்சனை
இந்த விவகாரம் குறித்த அதிக தகவல்கள் எப்படி வெளியானது என்பது பற்றியும் தெரிய வந்துள்ளது. பணப் பரிமாற்றத்தில் சிலர் இடையே ஏற்பட்ட தகராறு தான் இந்த மேட்ச் பிக்ஸிங் விவகாரம் வெளியே வர முக்கிய காரணம்.
நம்பமுடியாத அதிர்ச்சி
டிஎன்பிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. இது உண்மை என நிரூபிக்கப்பட்டால், தொடரே ரத்து செய்யப்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. இந்த விவகாரம் பல இளம் தமிழக வீரர்களை பாதிக்கவும் செய்யலாம்.