ரவி சாஸ்திரி நிலை
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி சாஸ்திரியை நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்காமல் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை கோரி உள்ளது பிசிசிஐ.
புதிய பயிற்சியாளர் யார்?
நிச்சயம் ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக மாட்டார் என நம்பும் ரசிகர்கள் அடுத்த பயிற்சியாளர் யாராக இருக்கும் என ஊகித்து வருகிறார்கள். சமீபத்தில் வந்த தகவலின் படி முன்னாள் இந்திய பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், மகிளா ஜெயவர்தனே, டாம் மூடி ஆகியோர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
உறுதியாக டாம் மூடி தான்
இவர்களில் டாம் மூடி தான் அடுத்த இந்திய பயிற்சியாளர் என சில ரசிகர்கள் திட்டவட்டமாக கூறி வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம், ஒன்றும் உள்ளது. டாம் மூடி கடந்த ஏழு வருடங்களாக ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக நீடித்து வருகிறார்.
சன்ரைசர்ஸ் அணியில் நீக்கம்
இந்த நிலையில், அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் டாம் மூடி. கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்று வரை சென்றது குறிப்பிடத்தக்கது. இவர் காலத்தில் தான் சன்ரைசர்ஸ் அணி 2016ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது.
காரணம் இல்லை
அணியில் இருந்து டாம் மூடியை நீக்க எந்த காரணமும் இல்லாத நிலையில், அவர் நீக்கப்பட்டு, உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ்-ஐ பயிற்சியாளராக நியமித்துள்ளது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.
|
மூன்றாவது முயற்சி
இந்த நீக்கத்தின் பின்னணி என்ன என்பது குறித்து இப்படி கூறுகிறார்கள். டாம் மூடி இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும், கிட்டத்தட்ட அவருக்கு தான் பயிற்சியாளர் பதவி என தெரிந்த நிலையில் தான் அவர் இனி ஐபிஎல் அணியில் பயிற்சியாளராக நீடிக்க முடியாது என தன் பதவியில் இருந்து விலகி இருக்கிறார் என்கிறார்கள். இதை நம்பலாமா என்று தான் தெரியவில்லை?