சிறப்பான தருணங்கள்
ஐபிஎல்லின் போட்டிகள் தினந்தோறும் ரசிகர்களுக்கு சிறப்பான உற்சாகமான தருணங்களை தந்துக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் நேரில் சென்று பார்க்க முடியாதது ஒன்றுதான் குறை. மற்றபடி வழக்கமான உற்சாகத்தை தர அது தவறவில்லை. இந்நிலையில் ஐபிஎல்லின் நேற்றைய 10வது போட்டி ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையில் நடைபெற்றது.
அரைசதங்களை விளாசிய வீரர்கள்
இதில் ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடியது. முந்தைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தோற்ற அந்த அணி, இந்த போட்டியில் வெற்றியை தக்க வைக்க போராடியது. அணியின் வீரர்கள் தேவ்தத் படிக்கல், ஆரோன் பின்ச் மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் தொடர்ந்து அரைசதங்களை விளாசி அணியின் ஸ்கோரை 201க்கு உயர்த்தினர்.
ஒற்றை இலக்க ரன் அடித்த விராட்
அணியின் இளம் ஆல்-ரவுண்டர் ஷிவம் தூபேவும் தன் பங்கிற்கு 10 பந்துகளில் 27 ரன்களை குவித்தார். இந்த போட்டியிலும் விராட் கோலி ஒற்றை இலக்கத்திலேயே தன்னுடைய ரன்களை முடித்துக் கொண்டார். இதனால் அணி நிர்வாகம் மட்டுமின்றி ரசிகர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆயினும் சூப்பர் ஓவரில் ஓரளவிற்கு சுதாரித்து ஆடினார்.
இன்ஸ்டாவில் மகிழ்ச்சி பதிவு
இந்நிலையில், ஆர்சிபி -மும்பை அணிகளுக்கிடையிலான இந்த போட்டி ஒரு கர்ப்பிணியாக தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாக விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் வெற்றிக்கு பிறகு விராட் கோலி மற்றும் ஏபி டீ வில்லியர்சின் கொண்டாட்டத்தையும் அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.