கவாஸ்கரின் கோபம்
1981ம் ஆண்டு நடந்த போட்டியில் சுனில் கவாஸ்கரை ஆஸ்திரேலிய வேகபந்துவீச்சாளர் டென்னிஸ் லில்லீ எல்.பி.டபள்யூ அவுட்டாக்கினார். ஆனால் பேட்டில் பந்து பட்டதில் உறுதியாக இருந்த கவாஸ்கர் கடும் கோபத்துடன் வெளியேறினார். அப்போது டென்னிஸ் வம்பிழுக்கும் வகையில் எதையோ கூற, ஆத்திரமடைந்த கவாஸ்கர் தனது பேட்டிங் பார்ட்னரையும் வா என அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். பின்னர் சமாதானம் செய்த பிறகே பேட்ஸ்மேன்கள் மீண்டும் களத்திற்கு வந்து ஆட்டம் நடந்தது.
ஹர்பஜன் தடை
2008ம் ஆண்டு நடந்த போட்டியில் ஹர்பஜன் தடை செய்யப்பட்டதை யாராலும் மறக்க முடியாது. ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸை " குரங்கு" என்பது போல விமர்சித்திருந்தார். இதனால் உடல் அமைப்பை கிண்டல் செய்ததாக கூறி அவருக்கு அந்த ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டது. மற்றும் சுற்றுப்பயணத்தில் இருந்தே விலகுமாறு மிரட்டல்கள் வந்தன. நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில் இறுதியில் விடுதலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்து சில ஆண்டுகளுக்கு பிறகு பேசிய ஹர்பஜன் தனது டர்பன் குறித்து கிண்டலடித்ததால் தான் அப்படி செய்தேன் எனக்கூறியிருந்தார்.
கோலியின் சர்ச்சை
2012ம் ஆண்டு தான் கோலி செய்த சம்பவம் நடந்தது. ஃபீல்டிங்கில் நின்றுக்கொண்டிருந்த விராட் கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் தொடர்ச்சியாக சீண்டிக்கொண்டே இருந்தனர். பவுண்டரி எல்லையில் நிற்கும் போதெல்லாம் கிண்டலடித்தனர். இதனால் கோபமடைந்த அவர், அனைவருக்கும் நடுவிரலை காட்டிவிட்டு சென்றார். இது அப்போது தலைப்பு செய்திகளிலேயே பரபரப்பாக பேசப்பட்டது. கோலி தனக்கு தடை விதிக்க வேண்டாம் என நடுவர்களிடம் கோரியதாகவும் தகவல் வெளியாகின.
ஸ்டீவ் ஸ்மித் ஒப்புதல்
2017ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த டெஸ்டில், உமேஷ் யாதவ் வீசிய பந்தில் ஸ்டீவ் ஸ்மித் எல்.பி.டபள்யூ அவுட் கொடுக்கப்பட்டது. தனது விக்கெட்டில் சந்தேகம் ஏற்பட்ட ஸ்மித், களத்திற்கு வெளியில் இருந்த அணி வீரர்களிடம் டிஆர்எஸ் எடுக்கவா? எனக்கேட்டார். இது விதிமுறைக்கு எதிரானது ஆகும். இதனால் கோபமடைந்த விராட் கோலி, நடுவரிடம் முறையிட்டு அவரை வெளியேற செய்தார். இதுகுறித்து பின்னர் பேசிய ஸ்மித், அந்த சமயத்தில் மூளை குழம்பிவிட்டது என ஓப்புக்கொண்டார்.
நிற வெறி தாக்குதல்
2021ம் ஆண்டு சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை நிறவெறியுடன் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கிண்டல் செய்தனர். இதனால் இந்திய அணி களத்தில் இருந்து சிறிது நேரத்திற்கு வெளியேறி இருக்க அம்பயர்கள் பரிந்துரைத்தனர். எனினும் அதனை தவிர்த்த கேப்டன் ரகானே, தொடர்ந்து ஃபீல்டிங் செய்வதாக கூறினார். அந்த விவகாரத்தில் 6 ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.