5. ரஹானே:
ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி, ஓராண்டு காலம் தடை பெற்றிருப்பதால், ராஜஸ்தான் நிர்வாகம் ரஹானேவை கேப்டனாக்கியது. இந்திய அணியின் மிடில் ஆர்டரில் தன்னை நிரூபித்துக்கொண்டிருந்த ரஹானேவிற்கு இந்த ஐபிஎல் தொடர் பெரிய ஏமாற்றமே. நன்றாக அடித்து நொறுக்கியிருந்தால் இந்திய அணிக்கு துவக்க வீரராகவோ அல்லது நான்காம் வீரராகவோ தன்னை நிலைநிறுத்தியிருக்கலாம். இதுவரை நடைபெற்ற பத்து ஆட்டங்களில் வெறும் 239 ரன்களை மட்டுமே அடித்துள்ளது பெரிய ஏமாற்றமே.
4. யுவ்ராஜ் சிங்:
போராட்ட குணத்திற்கு பெயர்போன பஞ்சாபின் சிங்கம், மீண்டும் ஒருமுறை நிச்சயம் கர்ஜிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் மொத்தம் 64 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஃபீல்டிங்கிலும் சொதப்ப, ரசிகர்கள் யுவ்ராஜ் ஓய்வு பெற்றால் போதும் என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள். ஆனாலும் 2019 வரை விளையாடுவேன் என்று சொன்னது மட்டுமே ஆறுதல்.
3. மாயங் அகர்வால்:
உள்நாட்டு போட்டிகளான, ரஞ்சி, சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே போன்ற தொடர்களில் துவம்சம் செய்த அகர்வால், பஞ்சாப் அணிக்காக பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. தான் ஆடிய 9 ஆட்டங்களில் வெறும் 118 ரன்களை மட்டும் குவித்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியது வருத்தமே.
2. மணீஷ் பாண்டே:
11 கோடிகள் கொட்டிக்கொடுத்து சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி மணீஷ் பாண்டேவை தன் வசமாக்கினார். கொல்கத்தா ஒரு முறை கோப்பையை வெல்ல காரணமாக இருந்த மணீஷ், கடந்த சில மாதங்களாக இந்திய அணிக்கும் விளையாடி வருகிறார். இந்தியாவின் மிடில் ஆர்டர் தேடல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட மணீஷ் இறுதியில் இந்திய அணியிலிருந்து வெளியேற்றும் வகையில் இந்த ஐபிஎல் அமைந்தது நிச்சயம் கொஞ்சம் ஜீரணிக்க முடியாத விஷயம் தான்.
1. ரவிச்சந்திரன் அஸ்வின்:
தோனி, ரெய்னா, ஜடேஜா என மூன்று இந்திய வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தேர்ந்தெடுத்துவிட்டதால், 'ரைட் டு மேட்ச்' கார்ட் அடிப்படையில் அஸ்வினை வாங்க முடியாது, ஆனாலும் ஏலத்தில் அவரை எடுக்க முனைவோம் என்று பேச்சுக்கு சொன்னாலும், 4 கோடி வரை மட்டுமே சென்னை நிர்வாகம் அஸ்வினுக்காக கையைத் தூக்கியது. ஏழரைக்கோடிக்கு பஞ்சாப் அஸ்வினை வாங்கியது மட்டுமல்லாமல் தங்களுடைய கேப்டன் என்றும் அறிவிக்க, சரிதான் அஸ்வின் பின்னிப் பெடலெடுக்கப்போகிறார் என்று நினைத்த நேரத்தில் வெறும் 6 விக்கட்டுகள் மற்றும் மிடில் ஓவர்களில் பந்து வீசியே சுமார் ஓவருக்கு 8 ரன்கள் என்று விட்டுக்கொடுத்து, மீண்டும் ஒரு தின ஆட்டங்களில் இந்தியாவிற்கு ஆடலாம் என்ற ஆசை நிராசை ஆனதுதான் மிச்சம்.