தள்ளிவைக்கப்பட்ட தொடர்
ஐபிஎல் 2021 தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மீது அனைவரது கவனமும் சென்றுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த தொடர் சிறப்பாக நடைபெற்று தற்போது இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
வசதிகள் கணக்கீடு
வரும் ஜூன் மாதத்தில் இந்த இறுதிப்போட்டி சௌதாம்ப்டனில் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக லார்ட்சில் இந்த போட்டி திட்டமிடப்பட்ட நிலையில், வீரர்களின் பல்வேறு சௌகரியங்கள் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு சௌதாம்ப்டனில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐசிசி பொது மேலாளர் அறிவிப்பு
சௌதாம்ப்டன் நியூசிலாந்து மற்றும் இந்திய வீரர்கள் இருதரப்பினருக்கும் மிகவும் வசதியாக இருக்கும் என்றும் பயோ பபுள் உள்ளிட்டவற்றை சிறப்பாக பராமரிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பான வகையிலும் போட்டியை நடத்த முடியும் என்றும் ஐசிசி பொது மேலாளர் ஜியோப் அலார்டைஸ் தெரிவித்துள்ளார்.
விராட்டிற்கு தலைவலி
இந்நிலையில் இந்த இறுதிப்போட்டிக்காக இந்திய அணியை தேர்வு செய்வது கேப்டன் விராட் கோலிக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தும் என்று நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கொலின் டீ கிராண்ட்ஹோம் தெரிவித்துள்ளார். முன்னதாக ஐசிசியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பேசியுள்ளது.
மிகப்பெரிய
இந்திய அணியில் சிறப்பான பந்துவீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் ஆகியோர் உள்ள நிலையில், அணியின் வீரர்கள் தேர்வு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. அணியின் அடித்தளம் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் கூறியுள்ளது.