இந்தியா வெற்றி
இந்தியா மற்றம் இங்கிலாந்து இடையிலான 4வது டி20 போட்டி நேற்றைய தினம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இந்த டி20 தொடரை இரு அணிகளும் 2க்கு 2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளன.
பந்து சரியாக திரும்பவில்லை
4வது போட்டிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன், இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் நேற்றைய போட்டியில் பனிப்பொழிவு முக்கியமான பங்கு வகித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதனால் பந்து சரியானபடி திரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
தோல்விக்கு காரணம்
16 மற்றும் 17 ஓவர்களில் 8 பந்துகளில் 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தவித்ததாகவும் அதுவே தங்களின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் அவர் மேலும் கூறினார். தங்களது சொந்த மண்ணை விட்டு வெளியில் வந்து விளையாடி வெற்றி பெறுவது சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார். அதுபோன்ற போட்டிகளை விளையாட விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
அதிகமாக கற்க விருப்பம்
இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்த தொடரில் எவ்வளவு கற்க முடியுமோ அவ்வளவு கற்க விரும்புவதாக இயான் மார்கன் மேலும் கூறினார். இந்த போட்டியில் ஷர்துல் தாக்கூர் முக்கிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.