வெட்கக் கேடு
நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் எடுக்க, இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் எடுத்தது. பிறகு இங்கிலாந்து இரண்டாம் இன்னிங்ஸில் கேப்டன் ஜோ ரூட் சதம் மூலமாக 303 ரன்கள் எடுத்தது. இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. என்னதான் இங்கிலாந்து வலிமையான பவுலிங் லைன் அப் கொண்டிருந்தாலும், இந்தியா நிச்சயம் இந்த டார்கெட்டை 9 விக்கெட்டை இழந்தாவது எட்டியிருக்கவே வாய்ப்புகள் அதிகம். இத்தனைக்கும் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. ஸோ, கடைசி நாளில் நிதானமாக விளையாடியிருந்தாலே இந்தியா ஜெயித்திருக்கும். அப்படியொரு அருமையான வாய்ப்பு மழை காரணமாக இந்தியாவுக்கு கை நழுவிப் போனது. கேப்டன் விராட் கோலி விரக்தியில் உச்சத்தில் இதனை 'வெட்கக் கேடானது' என்று கூறியிருந்தார்.
பழம் நழுவி பாலில்
ஏனெனில், ஒருவேளை இப்போட்டியில் இந்தியா ஜெயித்திருந்தால், தொடரை வெற்றிகரமாக தொடங்கி இருந்திருக்கும். அது இங்கிலாந்துக்கு மனதளவில் பெரிய பின்னடைவாக அமைந்திருக்கும். கடந்த 15 ஆண்டுகளில், இந்தியா இப்படி வெற்றிகரமாக இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. பழம் நழுவி பாலில் விழவிருந்த நேரத்தில், அந்த பாலில் தண்ணீர் குடம் குடமாக கொட்டப்பட்டது.
மெத்தனம்
இந்நிலையில் தான், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (ஆக.12) 2வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சியில் உள்ளன. இங்கிலாந்து ஒருபடி கூடுதலாக உஷார் மோடில் உள்ளது. ஏனெனில், முதல் போட்டியில் அவர்கள் செய்த தவறு "மெத்தனம்". என்னைப் பொறுத்தவரை அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணி தடுமாறியதைக் கண்டு மெத்தனமாக இருந்துவிட்டனர் என்றே நினைக்கிறேன். பும்ரா பந்துகள் ஃபைனலில் சுத்தமாக எடுபடவில்லை, இஷாந்தும் இம்பேக்ட் ஏற்படுத்த முடியாமல் தடுமாறினார். ஷமி மற்றும் அஷ்வின் மட்டுமே ஓரளவு தங்கள் பவுலிங்கிற்கு நியாயம் கற்பித்தனர்.
செஷனுக்கு செஷன்
ஸோ, இங்கிலாந்து பிட்சில் இந்தியன் ஃபேஸர்ஸ் மீண்டும் தடுமாறுகிறார்கள் என்று இங்கிலாந்து நிர்வாகம் தப்புக் கணக்கு போட்டிருக்கலாம். இது என்னுடைய வியூகம் மட்டுமே. ஆனால், முதல் டெஸ்ட் போட்டியில் வானிலை ஒரு முக்கிய பங்கு வகித்தது. செஷனுக்கு செஷன் அங்கு வெயிலும், குளிர் காற்றும் மாறி மாறி அமைந்தது. இருந்தாலும், இந்திய பவுலர்களின் ஸ்பெல் அட்டகாசமாக இருந்தது. குறிப்பாக, பும்ரா இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்துவிட்டார். ஜோஸ் பட்லர் அவரது ஒரு பந்தை கூட தொட முடியாமல், என்ன செய்வது என்றே புரியாமல் விழி பிதுங்க பிதுங்க நின்றது இன்னும் நினைவில் அப்படியே இருக்கிறது.
யார் யார்?
சரி விஷயத்துக்கு வருவோம்! இப்போது இந்த 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் இரு மாற்றங்கள் ஏற்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்! காயத்தால் அவதிப்பட்டு வரும் ஷர்துல் தாகூருக்கு பதிலாக நம்ம ரவிச்சந்திரன் அஷ்வினை களமிறக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், முதல் டெஸ்ட்டில் பவுலிங்கில் அசத்திய முகமது சிராஜுக்கு பதில், சீனியர் பிளேயர் இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. காயம் காரணமாகவே முதல் டெஸ்ட்டில், இஷாந்த் சேர்க்கப்படவில்லை. சிராஜுக்கு லக் அடித்தது. அவரும் தன் திறமையை வெளிப்படுத்தினார். இப்போது இஷாந்த் நல்ல முன்னேற்ற அடைந்திருப்பதாக லண்டனில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஒருவேளை இஷாந்த் 100% ஃபிட் என்றால், நிச்சயம் அவருக்கு தான் வாய்ப்பு என்று தெரிகிறது. அந்த ஃபிட்னஸ் சதவிகிதம் 99% சதவிகிதம் என்று இருந்தால் கூட, ரிஸ்க் எடுக்காமல் சிராஜுக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்பது உறுதி!