சூதாட்டம்
இந்தியாவில், சுமார் 3000 - 4000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் சந்தை ஐபிஎல். அதாவது இந்தியன் பிரீமியர் லீக். கொட்டும் கோடிகளுக்கு இடையே, சூதாட்ட தரகர்களின் ஆட்டம் அதிகமாக, 2013ல் இது பூதாகரமானது. ஐபிஎல் தொடரில் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக மூன்று வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
சிறப்பு பாஸ்
இந்த நிலையில், 2021 ஐபிஎல் தொடரில், கடந்த மே 2ம் தேதி நடந்த போட்டியின் போது சூதாட்ட தரகர்கள் ஸ்டேடியம் உள்ள நுழைய இரண்டு சிறப்பு பாஸ் ஏற்பாடு செய்து கொடுத்ததற்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. டி.டி.சி.ஏ எனப்படும் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் பியூன் பாலம் சிங் மற்றும் வீரேந்தர் சிங் ஷா ஆகியோர் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
போட்டி தகவல்கள்
இவர்கள் மனிஷ் கன்சல் மற்றும் க்ரிஷன் கார்க் எனும் இரு நபர்களுக்கு மேட்ச் பார்க்க அனுமதிக்கும் அங்கீகார கார்டுகளை (accreditation cards) கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இந்த மனிஷ் கன்சல் மற்றும் க்ரிஷன் கார்க் ஆகிய இருவரும் சூதாட்ட தரகர்களுக்கு ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையேயான போட்டி குறித்த தகவல்களை பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
தங்கள் ஆட்களுக்கு
இப்படி சூதாட்ட தரகர்களுக்கு அனுமதி பாஸ் ஏற்பாடு செய்து கொடுத்த ஷா, கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். மற்றொரு நபரான பாலம் ஒரு பியூன். இவர்கள் இருவரையும் அணுகிய புக்கிகள், தங்கள் ஆட்களுக்கு போட்டியை காண ஸ்டேடியம் உள்ளே நுழையும் அங்கீகார கார்டை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இரு அனுமதி ரத்து
இதையடுத்து, இருவரும் மாஸ்டர் பிளான் போட்டு, ஏற்கனவே முறையாக அங்கீகார கடிதம் வைத்திருந்த இரு நபர்களின் அனுமதியை ரத்து செய்து, அவர்களுக்கு பதில் இவ்விருவருக்கும் பாஸ் ஏற்பாடு செய்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையில், டி.டி.சி.ஏ தலைவர் ரோஹன் ஜெட்லி, "சம்பந்தப்பட்ட நபர் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், அனைத்து நடவடிக்கையும் சரியான முறையில் எடுக்கப்படும். போலீஸ் விசாரணைக்கு டி.டி.சி.ஏ ஒத்துழைத்து வருகிறது" என்று கூறியுள்ளார்.