இந்திய அணி தடுமாற்றம்
டாஸ் வென்ற U-19 பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் ஜூனியர்கள் வேகப்பந்துவீச்சாளர்கள் , சீனியர்கள் போல் பந்துவீசி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு நெருக்கடி அளித்தனர். இதில் U-19 இந்திய அணியின் தொடக்க வீரர் அங்கிரீஷ், கேப்டன் யாஷ் துல் டக் அவுட்டாக, சாயிக் ரஷித் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் U-19 இந்திய அணி 14 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது.
238 ரன்கள் இலக்கு
நிஷாந்த் சிந்து 8 ரன்களில் வெளியேற,தொடக்க ஆட்டக்காரர் ஹர்னுர் சிங் மட்டும் பொறுப்புடன் விளையாடி 46 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தடுமாறிய போது, ஆரத்யா யாதவ் 50 ரன்கள் சேர்த்தார். இறுதியில் கௌசல் தாம்பே 32 ரன்களும், ராஜ்வர்தன் 20 பந்துகளில் 33 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 237 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆட்டத்தில் பரபரப்பு
238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல் டக் அவுட்டாக, பொறுப்புடன் விளையாடிய முகமது சேஷாத் 82 ரன்கள் சேர்த்து பாகிஸ்தான் அணியை நிதானமாக வெற்றிக்கு அருகே அழைத்து சென்றார். இந்த நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது.
கடைசி 5 ஓவர்
கடைசி 5 ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன.அப்போது 46 வது ஒவரில் ரிஸ்வானையும்,(29) 48வது ஒவரில் இர்பான் கானையும் (33) இந்திய வீரர்கள் வீழ்த்தினர். இதனால் கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்ட்ட நிலையில், பாகிஸ்தான் 49வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசியது. இதனால் வெற்றிக்கு 6 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்டது.
த்ரில்லர்
கடைசி ஓவரின் முதல் பந்தில் இந்தியா மேலும் ஒரு விக்கெட்டை கைப்பற்ற, ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. 2வது மற்றும் 3வது பந்தில் தலா ஒரு ரன்னும், 4வது மற்றும் 5வது பந்தில் தலா 2 ரன்களை ஓடியே பாகிஸ்தான் வீரர்கள் எடுத்தனர். கடைசி பந்தில் பாகிஸ்தான் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பாகிஸ்தான் வீரர் அகமது கான் பவுண்டரி விளாசி , அவரது அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இந்திய அணி தரப்பில் ராஜ் பவா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.