நம்பிக்கை நட்சத்திரம் பிரியம் கார்க்
உத்தரபிரதேசத்தில் சாதாரண பால் வியாபாரியின் மகனாக பிறந்த பிரியம் கார்க், தற்போது 19 வயதுக்குட்பட்டவர்களுக்காக அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடரில் இந்தியாவின் கேப்டனாக உயர்ந்துள்ளார்.
கார்க்கிற்காக கடுமையான பணிகள்
உத்தரபிரதேசத்தில் தன்னுடைய தந்தை வீட்டுக்கு வீடு பால் வியாபாரம் செய்தும், பள்ளி வாகனம் மற்றும் சரக்கு வாகனங்களை ஓட்டியும் தன்னுடைய எதிர்காலத்திற்காக கடுமையாக உழைத்ததாக கார்க் தெரிவித்துள்ளார்.
பேருந்து கூரையில் பயணம்
இவ்வாறு கடுமையாக உழைத்து தன்னுடைய தந்தை தனக்காக தினமும் இரவு வேளையில் 10 ரூபாய் கொடுப்பார் என்றும் அதைக்கொண்டு, தான் மீரட்டில் கிரிக்கெட் பயிற்சிக்கு செல்வேன் என்றும் கார்க் தெரிவித்துள்ளார். அந்த பணமும் கிடைக்காத வேளைகளில் பேருந்தின் கூரைகளில் தான் பயணம் செய்த அனுபவமும் உண்டு என்றும் கூறியுள்ளார்.
தந்தையின் தொடர் கவனம்
மீரட்டில் தான் பயிற்சி மேற்கொண்ட நிலையில், சிறுவனாக இருந்தபோது தன்னுடைய பாதுகாப்பில் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரிகள் மிகுந்த கவனம் கொண்டதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
யூ-14, யூ-16 மற்றும் யூ-19 அணிகளில் பங்கேற்பு
பிரியம் கார்க் பயிற்சி பெற்ற அந்த அகேடமியில் இந்திய அணி வீரர்கள் பிரவீன் குமார் மற்றும் புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வீரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த அகேடமியில் பயிற்சி பெற்று யூ-14, யூ-16 மற்றும் யூ-19 ஆகிய அணிகளிலும் இடம்பெற்று சாதித்துள்ளார் பிரியம்.
பிரியம் கார்க் மகிழ்ச்சி
இந்திய கிராமங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்தது போலவே, தனக்கும் கிரிக்கெட்டின் கடவுள் சச்சினே உத்வேகம் அளித்ததாகவும், தன்னுடைய வீட்டில் டிவி இல்லாத நிலையில் அவரது போட்டிகளை காண்பதற்காக அருகிலுள்ள ஷோரூமில் மற்றவர்களை இடித்து தள்ளிக் கொண்டு போட்டிகளை கண்டதாகவும் மலரும் நினைவுகளை தெரிவித்தார் கார்க்.
இரட்டை சதம்... இரண்டு சதம்
கடந்த ஆண்டு நடைபெற்ற 19 வயதினருக்கான ரஞ்சி கோப்பை போட்டியில் ஒரு இரட்டை சதம், இரண்டு சதங்கள் மற்றும் 5 அரைசதம் போன்றவற்றை விளாசிய பிரியம், அந்த தொடரில் 867 ரன்களை குவித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் இழுத்தார்.
அவரின் கனவுக்காக வாழ்கிறேன்
தனக்காக பல தியாகங்களை செய்த தன்னுடைய தந்தை நரேஷின் கனவுகளுக்காக தான் வாழ்வதாகவும், இந்திய அணியில் கண்டிப்பாக தான் இடம்பெறுவேன் என்றும் பிரியம் கார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.