யூஏஇயில் நடத்த திட்டம்
கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில், ஐபிஎல் 2020 போட்டிகளை யூஏஇயில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ கடிதத்தையும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த கடிதத்திற்கு அறிக்கை மூலம் ஒப்புதல் தெரிவித்துள்ள இசிபி, ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பு
வரும் செப்டம்பர் 19ம் தேதி துவங்கி நவம்பர் 8ம் தேதி வரையில் ஐபிஎல் 2020 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த மத்திய அரசின் ஒப்புதலுக்காக பிசிசிஐ காத்திருக்கிறது. இந்த தொடருக்கான ஆயத்த பணிகளில் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் ஈடுபட திட்டமிட்டுள்ளது. இதனிடையே, வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ஐபிஎல்லின் 8 அணிகளும் யூஏஇக்கு பயணம் மேற்கொள்ள உள்ளன.
எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்ட் அறிக்கை
இதனிடையே எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐபிஎல் தொடரை நடத்துவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொடரை நடத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம், பிசிசிஐக்கு செய்யும் என்றும் கூறியுள்ளது.
பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை
ஐபிஎல்லின் 8 அணிகளும் ஏற்கனவே வீரர்களுக்கான தங்குமிடங்கள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. மேலும் சாலை மார்க்கமாக மேற்கொள்ளப்படும் பயணங்கள், மருத்துவ கட்டமைப்புகள் உள்ளிட்டவை குறித்தும் அவை ஆலோசனை மேற்கொண்டுள்ளன.