பிஎஸ்எல், சிபிஎல்
இந்த நிலையில், மற்ற நாட்டின் கிரிக்கெட் வாரியங்களும், தங்களது கிரிக்கெட் தொடர்களை அடுத்தடுத்து அமீரகத்தில் தொடங்க உள்ளன. குறிப்பாக, பாகிஸ்தான் தனது PSL டி20 லீக் தொடரை ஜூன்.5 முதல் அமீரகத்தில் நடத்துகிறது. இதற்காக வீரர்கள், அதிகாரிகள், ஒளிபரப்பு பொறுப்பாளர்கள் என்று அனைவரும் பயோ-பபுளில் கொண்டு வரப்படுகின்றனர். அதேபோல், கரீபியன் பிரீமியர் லீக் தொடரையும் அமீரகம் நடத்துகிறது. இதற்கான அனைத்து ஒப்பந்தகளும் முடிந்துவிட்டன.
குவியும் வருமானம்
இந்த சூழலில் தான் ஐபிஎல் 2021 தொடரின் மீதமுள்ள 31 போட்டிகளும், அமீரகத்தில் நடத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, உலகக் கோப்பை டி20 தொடரும் அமீரகத்தில் நடக்கும் என்றும், இன்னும் சில சர்வதேச கிரிக்கெட் தொடர்களும் அமீரகத்தில் நடத்தப்பட உள்ளன. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், ஐபிஎல், பிஎஸ்எல், சிபிஎல், டி20 உலகக் கோப்பை, சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் என்று அமீரகம் வரிசைக் கட்டி பல கிரிக்கெட் தொடர்களை நடத்துகிறது. இதன் மூலம், இதுவரை இல்லாத கோடிக்கணக்கில் வருமானம் குவியும் என்கின்றனர் கிரிக்கெட் ஆய்வாளர்கள்.
தலை சுற்றவைக்கும் செலவு
ஒரு சாம்பிளுக்காக இந்த எடுத்துக்காட்டை சொல்லலாம். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தியது இந்தியா. அதற்கு முன், 2014ம் ஆண்டு, இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்த பொழுது, 15 நாட்களுக்கான போட்டிகளை அமீரகத்தில் நடத்தியது பிசிசிஐ. அதாவது, 2014 ஏப்ரல் 16 - 30 வரையிலான போட்டிகள் அங்கு நடத்தப்பட்டது. அதற்கு நாம் செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.250 கோடி. இது கூட பெரிய விஷயமல்ல. வெறும் 15 நாளில், 250 கோடி வருமானம் ஈட்டியதன் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மொத்த வளர்ச்சியில், 5 சதவீதத்தை 'பெப்சி' ஐபிஎல் தனி ஒருவனாக உருவாக்கி திகைக்க வைத்தது.
எகிறிய தொகை
அதேபோல், கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக முழு தொடரையும் சவுரவ் கங்குலி தலைமையிலான பி.சி.சி.ஐ, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியது. இதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 98.5 கோடி. கொரோனாவால் சென்ற ஆண்டு ஸ்பான்சர்ஸ்ஷிப் வருவாயில் மட்டும் 30 - 40% வருமானத்தை பிசிசிஐ இழந்தது. இதனால், பல செலவுகள் குறைக்கப்பட்டது. ரசிகர்களும் நேரடியாக வந்து போட்டியை பார்க்கவில்லை. இவ்வளவு சிக்கலுக்கு மத்தியிலும், பிசிசிஐ 98.5 கோடி செலவு செய்தது. மேலும், பெண்கள் ஐபிஎல் டி20 தொடரை நடத்த எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் 2.52 கோடி ரூபாய் வசூலித்தது. இரண்டையும் சேர்த்து செலவு 100 கோடியைத் தாண்டியது.
போட்டிக்கு 1 கோடி
அதுமட்டுமல்ல, கடந்தாண்டு வழக்கமான கோவிட் -19 சோதனைகளை நடத்துவதற்காக 9.49 கோடி ரூபாய் செலவு, வீரர்களின் பயோ-பபுளுக்காக 3 கோடி என்று கிட்டத்தட்ட 13 கோடி தனியாக செலவழிக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த 2019 வரை, ஒவ்வொரு போட்டியையும் நடத்த அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு ரூ.50 லட்சம் கொடுக்கப்படும். அதாவது ஒரு போட்டியின் செலவினத் தொகை ரூ.50 லட்சம். ஆனால், கடந்த ஆண்டு இந்த தொகை அப்படியே இரட்டிப்பானது. ஒரு போட்டிக்கு 1 கோடி செலவு. இந்தியாவை விட, அமீரகத்தில் ஒவ்வொரு போட்டிக்குமான செலவினத் தொகை அதிகமாகும். ஆனால், வேறு வழியின்றி அங்கே தொடரை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், தான் இப்போது மீண்டும் அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடப்பது மட்டுமின்றி, பல நாடுகளின் கிரிக்கெட் தொடர்கள் நடக்கிறது என்றால், எவ்வளவு வசூல் ஆகும் என்று நீங்களே தோராயமாக கணக்கு போட்டுப் பாருங்களேன். தலே சுத்திடும்!.