சிஎஸ்கே அணி வீரர் ரெய்னா
யூஏஇயில் வரும் செப்டம்பர் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதிவரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது ஐபிஎல் 2020 தொடர். இதற்கென 8 ஐபிஎல் அணிகளும் தயாராகி வருகின்றன. சிஎஸ்கே அணியின் வீரர்களும் வரும் 20ம் தேதியையொட்டி யூஏஇக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னாவும் ஐபிஎல்லுக்கு தயாராகி வருகிறார். தன்னுடை பயிற்சிகளை அவர் துவங்கியுள்ளார்.
சுவாரஸ்யமானது என கருத்து
இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக வீட்டில் முடங்கியிருந்த நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகள் துவங்கவுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ரெய்னா, ஐசிசி கட்டுப்பாடுகளுடன் போட்டிகளை எதிர்கொள்வது சுவாரஸ்யமானது என்று குறிப்பிட்டுள்ளார். வீரர்களின் தற்போதைய தேவை பிட்னசுடன் கூடிய மனநலம்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிஎஸ்கே தாரக மந்திரம்
கடினமான உழைப்பு மற்றும் அதற்கான வெகுமதி என்பதே சிஎஸ்கேவின் தாரக மந்திரம் என்று குறிப்பிட்டுள்ள ரெய்னா, சிஎஸ்கே நிர்வாகம் மட்டுமின்றி கேப்டன் தோனியும் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் ரெய்னா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே கண்டிப்பாக வெல்லும் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விளையாடுவது கடினம்
யூஏஇயில் அதிகமான வெப்பம் காணப்படும் என்பதால் அங்கு விளையாடுவது, விக்கெட் இழப்பின்றி விளையாடுவது மிகவும் கடினமான செயல் என்று கூறியுள்ளார் ரெய்னா. ஆனால் அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா இடையிலான பயண இடைவெளி மிகவும் குறைவு என்பதால் திட்டமிடலுக்கு அதிகமான கால அவகாசம் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தோனி வேறு மாதிரி
கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வயதும் முக்கியம் என்றாலும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் மற்றும் சரியான திட்டமிடலை கொண்டவர் என்று ரெய்னா புகழ்ந்துள்ளார். மேலும் சரியான பிட்னஸ் இல்லாமல் 140 -150 கிலோமீட்டர் வேகத்தில் வரும் பந்துகளை எதிர்கொள்வது கடினம் என்றும் அது தோனிக்கு சிறப்பாக வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.