தற்காலிகமாக நீக்கம்
முன்னதாக பிப்ரவரி 20ம் தேதி தற்காலிகமாக உமர் அக்மல் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ஆடி வந்தார். அவர் ஸ்பாட் பிக்ஸ் செய்ததாக வந்த புகாரையடுத்து அவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. முதல் கட்டமாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு 3 வருட கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
விளக்கம் தர முன்வரவில்லை
மார்ச் 31ம் தேதிக்குள் தன் மீதான புகாருக்கு விளக்கம் அளிக்கலாம் என அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் விளக்கம் அளிக்கவில்லை. இந்த நோட்டீஸையும் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து இந்த விவகாரத்தை ஓய்வு பெற்ற நீதிபதி பசல் இ மீரான் செளஹானை தலைவராக கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிற்கு கிரிக்கெட் வாரியம் அனுப்பியது.
3 வருடத்திற்குத் தடை
அவர் தற்போது 3 வருட கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு முன்னணி வீரரான ஷர்ஜீல் கான் என்பவரை 5 வருட காலத்திற்கு தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்திருந்தது. தற்போது உமர் அக்மலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உமர் அக்மல் விக்கெட் கீப்பராகவும், சிறந்த பேட்ஸ்மேனாகவும், பார்ட் டைம் ஸ்பின்னராகவும் வலம் வந்தவர்.
கிரிக்கெட் குடும்பம்
இவரது குடும்பமே கிரிக்கெட் குடும்பம்தான். இவரது சகோதரர் கம்ரான் அக்மல். இவரும் பாகிஸ்தான் அணிக்காக ஆடியவர். இன்னொரு சகோதரர் அட்னான் அக்மல். இவரும் கிரிக்கெட் வீரர்தான். இவரது ஒன்று விட்ட சகோதரர் பாபர் ஆஸம். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தற்போது பிரபலமாக இருப்பவர். கோலியுடன் எல்லாம் இவரை ஒப்பிட்டுப் பேசுவார்கள். அதேபோல இவரது மாமனார் அப்துல் காதர். உலகப் புகழ் பெற்ற சுழற்பந்து வீச்சாளர். மச்சான் உஸ்மான் காதிரும் கூட ஒரு கிரிக்கெட் வீரர்தான்.
தூக்கிலிட வேண்டும்- மியான்தத் ஆவேசம்
பாகிஸ்தான் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஜாவேத் மியான்தத் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடுவோர் குறித்து காட்டமான கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் கூறுகையில், இதுமாதிரி ஊழல் செய்பவர்களை சும்மா விடக் கூடாது. தூக்கில் தொங்க விட வேண்டும். நாட்டின் பெயரைக் கெடுக்கும் இது போன்றவர்களை மன்னிக்கவே கூடாது என்று ஆவேசமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.