உமர் அக்மல் சர்ச்சை
உமர் அக்மல் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் துவங்கும் முன் அவரை அணுகிய மேட்ச் பிக்ஸிங் நபர்கள் பற்றி புகார் அளிக்கவில்லை. அது பெரிய சர்ச்சை ஆனது. அதை உமர் அக்மல் மறுத்தாலும் பின்னர் விசாரணையில் உண்மைகள் வெளியானது.
மூன்று ஆண்டு தடை
அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உமர் அக்மலுக்கு மூன்று ஆண்டுகள் தடை விதித்தது. பல முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் உமர் அக்மலுக்கு இது தேவை தான் என கூறி வந்தனர். அவர் துவக்கத்தில் இருந்தே பல சர்ச்சைகளில் இடம் பெற்று வந்ததை பலரும் சுட்டிக் காட்டினர்.
நஜம் சேதி சொன்ன உண்மை
இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நஜம் சேதி உமர் அக்மல் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகளை கூறினார். அவருக்கு காக்கை வலிப்பு நோய் மற்றும் மனநல பாதிப்பு இருந்ததாகவும், அதை அவர் ஒப்புக் கொள்ள மறுத்ததாகவும் கூறி உள்ளார்.
காக்கை வலிப்பு
நஜம் சேதி பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவராக பதவி ஏற்ற உடன் அவர் முன் உமர் அக்மல் பிரச்சனை வந்தது. உமர் அக்மலுக்கு காக்கை வலிப்பு நோய் இருந்ததற்கான மருத்துவ அறிக்கை அவர் முன் இருந்தது. உடனே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து பாதியில் உமர் அக்மலை அழைத்து பேசி உள்ளார் சேதி.
வலிப்பு நோய்
காக்கை வலிப்பு நோய் மூளையை பாதிக்கும். அதனால், இயல்புக்கு மாறாக நடந்து கொள்ளுதல், உணர்ச்சி வசப்படுவது, சில சமயம் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கூட போகலாம். உமர் அக்மல் தனக்கு அந்த நோய் இருப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இரண்டு மாத தடை
அதனால், வேறு வழியின்றி அவரை இரண்டு மாதம் தடை செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. ஆனால், அதன் பின் அந்த மருத்துவ அறிக்கையை தேர்வுக் குழுவிடம் அளித்து விட்டு உமர் அக்மல் விஷயத்தில் ஒதுங்கிக் கொண்டது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு.
மனநல பாதிப்பு
மேலும், அவருக்கு மன நலம் மற்றும் மருத்துவ ரீதியான பிரச்சனைகள் இருந்ததாக கூறிய நஜம் சேதி, அதற்கு சிகிச்சை எடுக்குமாறு பலமுறை கூறியும் கேட்கவில்லை என்றார். அதனாலேயே அவர் ஒவ்வொரு இரண்டு, மூன்று மாதத்திற்கு ஒருமுறை சர்ச்சைகளில் சிக்கினார் என்றார்.
சுயநல ஆட்டம்
மேலும், உமர் அக்மல் எப்போதும் அணிக்காக ஆடியதே இல்லை என்றும் தன் மனம் போன போக்கில் சுயநலமாக ஆடுவதையே வழக்கமாக வைத்து இருந்தார். அதனால், நாங்கள் அவரை தடை செய்ய நினைத்தோம். எனவே, இப்போது விதிக்கப்பட்டுள்ள தடை சரிதான் எனக் கூறினார் சேதி.
இதை செய்திருக்க வேண்டும்
உமர் அக்மல் திறமையான வீரராக இருந்தும் ஒழுக்கம் இல்லாதவராக இருந்தார். அவர் ஒரு மனநல மருத்துவருடன் அமர்ந்து பேசி, மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு இருந்தால் அவர் ஒழுக்கத்துடன் இருந்திருப்பார் என்றார் நஜம் சேதி.
ரசிகர்கள் அதிர்ச்சி
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய வீரர் ஒருவர் ஆபத்தான காக்கை வலிப்பு நோயுடன் கிரிக்கெட் ஆடியதும், அவருக்கு மனநலம் சார்ந்த பிரச்சனை இருந்ததும், அவற்றை தெரிந்து கொண்டே பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவரை அணியில் ஆட வைத்ததும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.