தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன டெஸ்ட் தொடர் 2018இல் நடந்தது. அந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் - தென்னாப்பிரிக்க வீரர்கள் இடையே கடும் முட்டல் - மோதல் இருந்தது. வார்னர் - டி காக் இடையே கைகலப்பு கூட நடந்தது.
எல்லை மீறி கிண்டல்
அதை அடுத்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தில் எல்லை மீறி டேவிட் வார்னர் மனைவியை கிண்டல் செய்து வந்தனர். தென்னாப்பிரிக்க பத்திரிக்கைகளும் டேவிட் வார்னரை மோசமாக சித்தரித்து வந்தது. அதனால் ஆஸ்திரேலிய அணி மன உளைச்சலில் இருந்தது.
திட்டம் போட்ட வார்னர்
நியூலான்ட் டெஸ்ட் போட்டியில் எப்படியும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணியின் எல்லை மீறல்களுக்கு முடிவு கட்ட நினைத்த துணை கேப்டன் டேவிட் வார்னர், இளம் வீரர் கேமரான் பான்கிராப்ட்டிடம் உப்புத்தாள் மூலம் பந்தை சேதப்படுத்துமாறு திட்டம் வகுத்து கொடுத்துள்ளார்.
கண்டுகொள்ளாத கேப்டன்
பந்து சேதம் அடைந்தால் அதிகமாக ஸ்விங் ஆகும். அதை வைத்து தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை திணற வைக்க முடியும் என்பது தான் வார்னரின் திட்டம். இந்த திட்டம் தெரிந்தும், கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.
சிக்கிய பான்கிராப்ட்
ஆனால், அன்று இரு அணிகளுக்கு இடையே நடந்த மோதல்களால் பதற்றமான சூழ்நிலை இருந்தது. அப்போது பான்கிராப்ட் மஞ்சள் நிறத்தில் உப்புத் தாளை எடுத்து பந்தை தேய்க்க முயன்றார். அது போட்டியை ஒளிபரப்பி வந்த தென்னாப்பிரிக்க தொலைக்காட்சியால் பல முறை திரையில் காட்டப்பட்டது.
அம்பயர் விசாரணை
அந்த தகவல் கள அம்பயர்களுக்கு சென்றது. அங்கே கடந்த உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அம்பயர் இயான் கூல்டும் இருந்தார். அவர் பான்கிராப்ட் மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை அழைத்து விசாரித்தார். பின் அவர்களை எச்சரிக்கை செய்தார்.
பெரிதாக மாற்றிய ஊடகங்கள்
அதற்குள் இந்த விவகாரம் ஊடகங்களால் பெரிதாக ஊதப்பட்டது. ஐசிசி கடும் அழுத்தம் காரணமாக போட்டிக்கு பின் விசாரித்து அவர்களுக்கு விதிப்படி சிறிய அளவில் தண்டனை கொடுத்தது. அது போதாது என குரல்கள் ஒருபுறம் எழுந்தது. மறுபுறம் ஆஸ்திரேலிய பிரதமர் இந்த சம்பவம் பற்றி பேட்டி அளித்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.
ஓராண்டு தடை
அதனால், கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு வேறு வழியின்றி வார்னர், ஸ்டீவ் ஸ்மித்தை ஓராண்டுக்கு தடை செய்தது. பலியாடான பான்கிராப்ட் ஒன்பது மாதம் தடை செய்யப்பட்டார். இவை அனைத்துமே அந்த வீரர்கள் பந்தை சேதம் செய்தது மற்றும் அதற்காக திட்டமிட்டது ஆகியவற்றுக்கு சேர்த்து தான் அளிக்கப்பட்டது.
சேதம் செய்யவே இல்லை
ஆனால், ஓய்வு பெற்ற அம்பயர் இயான் கூல்டு அன்று சேதம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட பந்து இப்போது தன்னிடம் தான் உள்ளது என்றும், அந்த பந்தை பார்த்தால் அதை அவர்கள் சேதம் செய்யவில்லை என்ற உண்மை புரியும் என்ற அதிர்ச்சித் தகவலை கூறி உள்ளார்.
முயற்சி மட்டுமே செய்தனர்
அவர்கள் பந்தை சேதப்படுத்த முயற்சி செய்ததாகவும், அப்போதே அவர்கள் சிக்கிக் கொண்டதாகவும் கூறி உள்ளார். இந்த தகவல் அன்றே கூறப்பட்டு இருந்தால், இந்த விவகாரம் இத்தனை பூதாகரமாக மாறி இருக்காது. அப்போதும் அவர்களுக்கு தண்டனை கிடைத்து இருக்கும். ஆனால், அது சிறிய அளவில் இருந்திருக்கும். ஆனால், அந்த விவகாரம் தான் இப்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை மாற்றி அமைத்துள்ளது.