இன்று இறுதிப்போட்டி
தென்னாப்பிரிக்காவில் அன்டர் 19 உலக கோப்பை கடந்த மாதம் 17ம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று போட்செப்ஸ்ட்ரோமின் சென்வெஸ் பார்க்கில் நடைபெறவுள்ளது. இதுவரை 4 முறை இந்த உலக கோப்பை தொடரை கைகொண்டுள்ள இந்திய அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள வங்கதேசத்துடன் மோதவுள்ளது.
இந்திய அணி அபாரம்
இந்த தொடரில் காலிறுதி மற்றும் அரையிறுதிப்போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியுள்ள நிலையில், இதேபோல காலிறுதி மற்றும் அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்தை வெற்றிகொண்டு வங்கதேசம் இந்த இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த தொடரில் தான் பங்கேற்ற போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
பாகிஸ்தானுடனான அரையிறுதியில் சதம்
இந்த தொடரில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மொத்தத்தில் 312 ரன்களை குவித்து, அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமைக்கு ஆளாகியுள்ளார். தான் பங்கேற்ற ஒரேயொரு போட்டியில் மட்டும் ஆட்டமிழக்காமல் 29 ரன்களை அடித்துள்ள இவர் மற்ற அனைத்து போட்டிகளிலும் அரைசதமாவது அடித்து கவனம் பெற்றுள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் துவக்க வீரராக களமிறங்கி சதமடித்து, அந்த அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த காரணமாக இருந்தார்.
கோப்பையை வெல்ல தீவிரம்
இன்றைய போட்டியில் துவக்க வீரர் ஜெய்ஸ்வால், திவ்யான்ஷ் சக்சேனா, பிரியம் கர்க் போன்றவர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 4 முறை டைட்டிலை ஜெயித்துள்ள இந்திய அணி கடந்த ஆண்டும் டைட்டில் வின்னராக உள்ளது. இந்நிலையில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு வங்கதேசம் முன்னேறியுள்ளதால் கோப்பையை வெல்ல அந்த அணி முனைப்பு காட்டி வருகிறது.
இந்திய பந்துவீச்சாளர்கள்
இந்தியா அன்டர் -19 அணியின் முக்கிய பலமாக பந்துவீச்சாளர்கள் உள்ளனர். முக்கியமாக அணியின் சுஷாந்த் மிஸ்ரா, கார்த்திக் தியாகி மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோர் இந்த தொடரில் தங்களது சிறப்பான பந்துவீச்சின்மூலம் இந்திய அணியின் வெற்றியை ஒவ்வொரு போட்டிகளிலும் உறுதி செய்தனர். மேலும் இந்த தொடரில் லெக் ஸ்பின்னர் ரவி பிஸ்னோயும் விக்கெட்டுகளை எடுத்து அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.
எதிரணி ஸ்கோரை சுருக்கிய பௌலர்கள்
தொடரின் அனைத்து போட்டிகளிலும் தங்களது கடுமையான பந்துவீச்சு மூலம் எதிரணியின் ஸ்கோரை சுருக்கி இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பான வெற்றியை இந்தியா பெற காரணமாக இருந்தனர். இந்த தொடரில் இந்தியாவுடன் மோதிய அணிகளில் அதிகபட்சமாக இலங்கை அணி மட்டுமே ஒரு போட்டியில் 200 ரன்களை தாண்டி ரன்களை எடுத்திருந்தது.
இந்தியாவிற்கு ஸ்டப் கொடுக்கும் பௌலர்கள்
இதேபோல இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக வங்கதேசத்தின் இடதுகை ஸ்பின்னர் ராக்கிபுல் ஹாசன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேச அணியின் மஹ்மதுல் ஹாசன் ஜோய் மற்றும் தான்சித் ஹாசன் ஆகியோர் சிறப்பான பேட்ஸ்மேன்களாக அந்த அணிக்காக அதிக ரன்களை குவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.