இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்
ஐசிசி அன்டர் -19 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் நிலையில், இதில் அரையிறுதியில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்து பாகிஸ்தானை தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். மற்றொரு அரையிறுதியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில் அதில் வெற்றிபெறும் அணியுடன் இந்தியா வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகிறது
ஐசிசி அன்டர் 19 உலக கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் நிலையில், இதில் இலங்கை, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை வீழ்த்தி அனைத்து போட்டிகளிலும் வெற்றி கொண்ட இந்திய இளம் அணி வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறினர். இதில் நேற்று பாகிஸ்தானுடன் மோதி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளனர்.
172 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல்-அவுட்
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி, 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழக்க, தொடர்ந்து ஆடிய இந்திய துவக்க வீரர்கள் 35.2 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து வெற்றியடைந்தனர். இந்த ஆட்டத்தில் 113 பந்துகளுக்கு 105 ரன்களை அடித்த இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். இதேபோல திவ்யான்ஷ் சக்சேனா 59 ரன்களை அடித்து கவனம் பெற்றார்.
அன்டர் -19 உலககோப்பையில் சாதனை
இந்திய அணி சார்பில் முதலில் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திவ்யான்ஷ் சக்சேனா இருவரும் அதிரடியாக ஆடி 88 பந்துகள் மீதமிருந்த நிலையில், ஆட்டத்தை முடித்து வைத்தனர். இதன்மூலம் அன்டர் -19 உலக கோப்பை தொடரில் நாக்-அவுட் சுற்றில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
சொற்ப ரன்களில் வெளியேறிய துவக்க வீரர்கள்
பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பந்துவீசிய இந்திய பௌலர்களும் சிறப்பான பந்துவீச்சை உறுதி செய்தனர். சிறப்பான கேட்ச்கள், ரன்-அவுட்டுகள் என ஆட்டத்தை பரபரக்க வைத்தனர். கடந்த காலிறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய வீரர்களின் பௌலிங், இந்த போட்டியிலும் எதிரொலித்தது. பாகிஸ்தானின் முதல் மூன்று விக்கெட்டுகளை இந்திய பௌலர்கள் சொற்ப ஓவர்களில் ஆட்டமிழக்க வைத்து அந்த அணியின் ரன்னை சுருக்கினர்.
ஆதரவாக விளையாடிய சக்சேனா
இதையடுத்து இந்தியா சார்பில் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திவ்யான்ஷ் சக்சேனா ஆகியோர் தங்களுடைய பவுண்டரிகள் மற்றும் சிக்ஸ்களால் மைதானத்தை அதிரவிட்டனர். இந்தப் போட்டியில் 105 ரன்களை அடித்துள்ள ஜெய்ஸ்வால், தொடரின் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார். மேலும் இந்தியாவின் இந்த பார்ட்னர்ஷிப்பே அன்டர் 19 உலக கோப்பை அரையிறுதியின் அதிகமான ரன் குவித்த பார்ட்னர்ஷிப் என்ற பெருமையும் கிடைத்துள்ளது.
ரசிகர்கள் ஆவல்
இதுவரை அன்டர் -19 உலக கோப்பை தொடரில் 4 தொடர்களை இந்திய அணி வெற்றி கொண்டுள்ள நிலையில், தற்போது 5வது வெற்றிக்கு தீவிரம் காட்டி வருகின்றனர். வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அல்லது வங்கதேசத்துடன் இந்திய அணி மோதவுள்ள நிலையில், இந்தியாவின் வெற்றியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
பல்வேறு தரப்பினர் புகழ்ச்சி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த அரையிறுதிப் போட்டியின் வெற்றியை அடுத்து இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது. இந்திய தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத், முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் உள்ளிட்டவர்களும் இந்திய வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.