தோனி குறித்து பாராட்டு
முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் இந்திய அணியின் சிறப்பான ஆட்டக்காரர்களில் ஒருவர். துவக்க ஆட்டக்காரராக இவர் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இவர் முன்னாள் கேப்டன் தோனியின் தலைமை குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
தோனி குறித்து வீரேந்திர சேவாக்
முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி தலைமையில் அணியில் வீரர்களின் பேட்டிங் இடம்குறித்த ஒரு தெளிவு இருந்ததாக வீரேந்திர சேவாக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியத்துவம் உணர்ந்த தோனி
அணியில் விளையாடும் வீரர்களுக்கு ஆதரவாக செயல்படுவதன் அவசியம் குறித்து தோனி உணர்ந்திருந்ததாகவும், தான் சிரமங்களை எதிர்கொண்டாலும் வீரர்களை தொடர்ந்து அவர் காத்து வந்ததாகவும் சேவாக் கூறியுள்ளார்.
கவனமாக இருந்த தோனி
இந்திய அணியை முன்னேற்றி எடுத்து செல்லக்கூடிய ஆற்றல் கொண்ட வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்து தோனி கவனமாக இருந்ததாகவும் சேவாக் தெரிவித்துள்ளார்.
திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம்
தற்போது துவக்க ஆட்டக்காரர்களின் நிலை சிறப்பாக உள்ளதாகவும் மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்களுக்கு கேப்டனின் ஆதரவு தேவைப்படுவதாகவும் சேவாக் மேலும் கூறினார். வீரர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் அவர்கள் எவ்வாறு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கால அவகாசம் வேண்டும்
தானும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவதற்கு முன்பாக மிடில் ஆர்டரில் விளையாடியபோது நிறைய தவறுகளை செய்ததாகவும் குறிப்பிட்ட சேவாக், மைதானத்திற்கு வெளியில் உட்கார்ந்துக் கொண்டிருந்தால் வீரர்களுக்கு முன்னேற்றம் கிடைக்காது என்றும் அவர்கள் திறனை வெளிப்படுத்த காலஅவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"தொடர் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்"
இதேபோல அணியின் ஐந்தாவது இடத்தில் விளையாட கே.எல்.ராகுலுக்கு தொடர்ந்து 4 வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் திறனைவெளிப்படுத்த தவறும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை நிர்வாகம் மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.