விராட் கோலி
இந்திய அணியில் விராட் கோலி அண்டர் 19 அணியில் இருந்து வந்து சாதித்தார். உலகின் நம்பர் 1 வீரராக தற்போது வலம் வருகிறார். அண்டர் 19 அணியில் இருந்து நேரடியாக இந்திய அணியில் இடம் பெற்றவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.
எதிர்பார்ப்பு
அப்படி ஒரு வாய்ப்பு உன்முக்த் சந்த்துக்கும் கிடைக்கும் என 2012இல் வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எப்படியும் அவர் உள்ளூர் அணிகளில் சாதித்து இந்திய அணியில் இடம் பெற்று விடுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.
டெல்லி அணியில் நீக்கம்
துரதிஷ்டவசமாக அவர் டெல்லி மாநில ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து இந்தியா ஏ அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். அடுத்து ஐபிஎல் அணியில் இருந்து வேறு அணிக்கு மாற அவர் செய்த முயற்சியில் ஏமாந்து போனார்.
பேட்டி அளித்தார்
அவரது மோசமான கிரிக்கெட் கேரியர் பற்றி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவிடம் மனம் திறந்தார் உன்முக்த் சந்த். தான் எப்படி ஒவ்வொரு அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்பது குறித்து அவர் அந்த பேட்டியில் கூறி உள்ளார்.
பெரிய அதிர்ச்சி
"எனது பெரிய அதிர்ச்சி டெல்லி ஒருநாள் போட்டிகள் அணியில் இருந்து நான் நீக்கப்பட்டது தான். அப்போது (2016இல்) நான் இந்தியா ஏ அணிக்கு கேப்டனாக இருந்தேன். ரன்கள் குவித்து வந்தேன். மும்பையில் உள்ளூர் டி20 போட்டிகளில் ஆடி வந்தேன். அப்போது என்னை டெல்லி அணியில் இருந்து நீக்கினார்கள்." என்றார்.
என்ன சொன்னார்கள்?
மேலும், "அப்போது தான் ஷிகர் தவான், கௌதம் கம்பீருடன் ஆடி வந்தேன். அப்போது தேர்வுக் குழு என்னை வேறு ஒரு விஷயத்துக்கு தயார் செய்வதாக கூறினார்கள். ஆனால், என்னை டெல்லி அணியில் இருந்து நீக்கி விட்டார்கள்" என்றார் உன்முக்த் சந்த்.
ஆட்டநாயகன்
"டெல்லி அணி முதல் மூன்று போட்டிகளில் தோற்ற பின் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஐந்தாவது மற்றும் ஆறாவது போட்டியில் நான் ஆடினேன். அதில் 75 மற்றும் 80 ரன்கள் எடுத்தேன். இரண்டு முறையும் ஆட்டநாயகன் விருதையும் வென்று இருந்தேன்" என தான் சிறப்பாக ஆடியும் நீக்கியதை குறித்து கூறினார்.
இந்தியா ஏ வாய்ப்பும் போனது
"வாய்ப்பு இல்லாததால் என்னால் அதிக போட்டிகளில் ஆட முடியவில்லை. அதனால் அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை. அதனால், இந்தியா ஏ அணியிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. 2017இல் தான் முதல்முறையாக நான் இந்தியா ஏ அணிக்காக ஆடவில்லை. அதே நேரத்தில் தான் ஐபிஎல்-இல் இருந்து நீக்கப்பட்டேன்" என்றார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில்..
"அப்போது நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தேன். அவர்கள் என்னை தக்க வைத்தார்கள். அது பெரிய அணி என்பதால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் வேறு அணிக்கு செல்ல நினைத்தேன்." என உன்முக்த் சந்த் கூறினார்.
அணி மாற திட்டம்
"நான் ஒருவருடன் பேசினேன். அவர் என்னை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி அவர்கள் அணிக்கு வருமாறு கூறினார். எனக்கு பணம் முக்கியம் இல்லை. போட்டிகளில் ஆடவேண்டும் என நினைத்தேன். ஆனால், ஏலத்தில் என்னை யாரும் தேர்வு செய்யவில்லை" என தனக்கு நேர்ந்த துயரத்தை கூறினார்.
எங்குமே இல்லை
"திடீரென டெல்லி கிரிக்கெட், ஐபிஎல் இல்லை என்ற உண்மை என் முகத்தில் அறைந்தது. அது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. என் உடைகள் கிழித்து எறியப்பட்டது போல நான் உணர்ந்தேன். எல்லா இடங்களிலும் இருப்பது போல இருந்து, திடீரென எங்குமே நான் இல்லை. அதன் பின் 3 - 4 நாட்கள் கழித்து தான் நான் பயிற்சிக்கு சென்றேன்" என்று தன் சோகத்தை பகிர்ந்தார் உன்முக்த் சந்த்.