முன்னாள் வீரர்கள் ஆட்டம்
சாலை பாதுகாப்பை வலியுறுத்தும்வகையில் முன்னாள் வீரர்களை கொண்டு சாலை பாதுகாப்பு உலக தொடர் 2021 நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளை சேர்ந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்று ஆடி வருகின்றனர்.
வங்கதேசம் -இலங்கை போட்டி
முன்னாள் வீரர்களான இவர்களின் ஆட்டத்தை இவர்களின் காலகட்டத்தில் பார்த்திருக்காத இளம் ரசிகர்களையும் இவர்களது ஆட்டம் கவர்ந்திழுத்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் வங்கதேசம் மற்றும் இலங்கை ஜாம்பவான்கள் மோதிய ஆட்டம் ராய்ப்பூரில் நடைபெற்றது.
42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இந்த போட்டியில் இலங்கை 42 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இலங்கையின் உபுல் தாரங்கா அவுட்டாகாமல் எடுத்த 99 ரன்கள் அணி சிறப்பாக வெற்றி பெற உதவியது. இதையடுத்து அந்த அணி 16 புள்ளிகளுடன் இந்த தொடரின் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
வங்கதேச வீரர் நிஜாமுதீன் அதிரடி
முதலில் ஆடிய இலங்கை அணி 181 ரன்களை அடித்த நிலையில், வங்கதேச அணி மிகுந்த திணறலுக்கு பின்பு 20 ஓவர்களிலும் முழுமையாக விளையாடி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஆயினும் அந்த அணியின் நிஜாமுதீன் அடித்த அதிரடி அரைசதம் அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இவர் இந்தியாவிற்கு எதிரான கடந்த போட்டியில் 49 ரன்களை அடித்தது குறிப்பிடத்தக்கது.