சவாலான இறுதிப் போட்டி
அதற்கு அடுத்த ஆண்டு.. 2008ல் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணி அங்கு CB சீரிஸில் விளையாடியது. தோனி கேப்டன். ரோஹித், உத்தப்பா போன்ற இளைஞர்கள் அன்றைய அணியில் இளம் வீரர்கள். இன்றைய கேப்டன் விராட் கோலி அப்போது அண்டர் 19 கேப்டன். அது ஒரு முத்தரப்பு தொடர். இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் அதில் விளையாடின. இறுதிப் போட்டிக்கு தேர்வானது இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தான்.
விளாசிய சச்சின்
அதில் வியப்பு என்னவெனில், இறுதிப் போட்டிகள் மொத்தம் மூன்று. அந்த மூன்றில் எந்த அணி அதிகம் வெற்றிப் பெறுகிறதோ, அதற்கே சாம்பியன் கோப்பை. இதில், முதல் இரு போட்டிகளிலும் தோனி அணி பட்டையைக் கிளப்பி வென்றது. முதல் போட்டியில் சச்சின் சதமடிக்க, இரண்டாவது போட்டியில் 91 ரன்கள் குவித்தார். அந்த தொடரில் அவர் அடித்த மொத்த ரன்கள் 399. முதன் முதலாக ஆஸ்திரேலிய மண்ணில், இந்திய அணி ஒரு கோப்பையை ஏந்தியது என்றால் அது 2008 CB சீரிஸ் தான். தோனியின் மகுடத்தில் மற்றொரு வைரக்கல்லாக அந்த வெற்றி அமைந்தது.
இரண்டு காயங்கள்
இந்நிலையில், இத்தனை வருடங்கள் கழித்து, அந்த தொடர் குறித்து தனது நினைவலைகளை ராபின் உத்தப்பா பகிர்ந்து கொண்டுள்ளார். இறுதிப் போட்டிகளில் சச்சினுடன் ஓப்பனிங் இறங்கிய வீரர் உத்தப்பா. இதுகுறித்து அவர் கூறுகையில், "அந்த தொடரின் போது சச்சின் இரண்டு வித காயங்களால் அவதிப்பட்டார். ஒருநாள் போட்டியின் போது தனது விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. இரண்டாவது இடுப்பு பிரச்சினை. இந்த இரண்டு காயங்களாலும் அவர் பேட்டிங் செய்ய ரொம்பவே சிரமப்பட்டார்.
மிகுந்த வேதனை
அப்போது அவரது நிலைமை உண்மையில் சரியில்லை. ஏனெனில், அவ்வளவு வலி இருந்தது. நாங்கள் அவரிடம், 'இப்போது எப்படி இருக்கிறது?' என்று கேட்டால், 'நன்றாக இருக்கிறேன்' என்பார். அவர் எப்போதும் அணியின் தேவையை பூர்த்தி செய்வதில் முன்னுரிமை கொடுப்பார். அவர் எப்போதும் அதைச் செய்வார். அந்த தொடரில் அவர் மிகுந்த வேதனையுடன் விளையாடினார்" என்றார்.
நாம் எப்போதும் ஜாலியாக பார்த்து கொண்டாடும் வெற்றிகளுக்கு பின்னால் உள்ள காயங்களின் வலி பெரியது. இது சச்சினுக்கு மட்டுமல்ல.. எல்லா வீரர்களுக்கும் பொருந்தும்.