புனே: ஐபிஎல் லீக் போட்டியில் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது
ஐ.பி.எல். தொடரில் உத்தப்பா, காம்பீர் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரைசிங் புனே அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
புனேவில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் லீக் 30-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதின. டாசில் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீர் பீல்டிங் தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. ரஹானே 46, ராகுல் திரிபாதி 38, ஸ்மித் 51, டோணி 23, கிறிஸ்டியன் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன் பின்னர் 183 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஓபனிங் பேட்ஸ்மேனாக சுனில் நரேன் 16 ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் இணைந்த கம்பீர், உத்தப்பா ஜோடி புனே வீரர்களின் பந்துவீச்சை பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் விளாசினார். இதனால் அந்த அணி 10 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.
அதிரடியாக விளையாடிய உத்தப்பா 47 பந்துகளில் 87 ரன்களில் எடுத்திருந்த போது அவுட்டானார். அவரை தொடர்ந்து கேப்டன் காம்பீரும் 62 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் கொல்கத்தா அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிராவா(6), மணிஷ் பாண்டே(0) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 8 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி தனது 6-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தது. ஹாட்ரிக் வெற்றி பெற்ற புனே அணி தனது 4வது தோல்வியை சந்தித்துள்ளது.