வெற்றிக்கான தீவிரம்
ஐபிஎல் 2021 தொடரின் முதல் போட்டியை டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் கடந்த 10ம் தேதி விளையாடியது சிஎஸ்கே அணி. கடந்த சீசனில் ப்ளே-ஆப்பிற்கு முன்னேறாத அந்த அணியிடம் இந்த சீசனில் வெல்லும் தீவிரம் காணப்படுகிறது. ஆயினும் முதல் போட்டியில் அந்த அணியின் பௌலிங் ஆர்டர் சிறப்பாக இல்லாத காரணத்தால் அணிக்கு வெற்றி வசப்படவில்லை.
கொண்டாடிய சிஎஸ்கே வீரர்கள்
இந்நிலையில் நாளை மறுதினம் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சிஎஸ்கே மோதவுள்ளது. இதற்கான திட்டங்களுடன் தயாராக உள்ளது சிஎஸ்கே. இதனிடையே தமிழ் புத்தாண்டையும் இன்றைய தினம் கொண்டாடி மகிழ்ந்துள்ளது. அந்த அணியின் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இதையொட்டி வேட்டிக் கட்டிக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேட்டி சட்டையுடன் கொண்டாட்டம்
அவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விதவிதமாக வெளியிட்டுள்ளது சிஎஸ்கே. எங்கள் வீட்டில் எல்லா நாளும் மஞ்சள் என்று ரெய்னா உள்ளிட்டவர்கள் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ந்துள்ளது சிஎஸ்கே. அதில் புத்தாண்டையொட்டி ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் வேட்டி சட்டையுடன் கைகளை இணைத்துக் கொண்டு போஸ் கொடுக்கின்றனர்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இதையடுத்து புத்தாண்டையொட்டி புத்தாண்டின் சிறப்பான பலகாரங்களுடன் ரெய்னா, ஜெகதீசன் ஆகியோர் வேட்டி சட்டையுடன் வலம் வந்து அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கும் படியான வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது சிஎஸ்கே. மற்ற வீரர்களுக்கும் அவர்கள் உணவுகளை பகிர்ந்ததையும் காண முடிந்தது.
கலக்கல் வீடியோ
இதையடுத்து மற்றொரு வீடியோவையும் சிஎஸ்கே பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் சுரேஷ் ரெய்னா மாஸ்டர் செப்பாக மாறி சமையல் செய்யும்படியாக வீடியோ செல்கிறது. சிஎஸ்கே வீரர்களின் கலாட்டாக்களுடன் அவர்கள் சமையல் செய்வது சிறப்பாக அமைந்துள்ளது.