சிறப்பான வருண் சக்ரவர்த்தி
நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார் வருண் சக்ரவர்த்தி. இந்த சீசனில் அவரது செயல்பாடு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. 13 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை குவித்து, அணியின் அதிக விக்கெட்டுகளை எடுத்த பௌலர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
காயம் காரணமாக நீக்கம்
இதையடுத்து ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி மோதிவரும் டி20 தொடரில் வருணின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து என்சிஏவில் அதன் தலைவர் ராகுல் டிராவிட்டின் கீழ் அவர் தன்னுடைய பிட்னசை நிரூபிக்கும்வகையில் பயிற்சி பெற்று வருகிறார்.
மிகப்பெரிய பெருமை
இதனிடையே ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலின்கீழ் பயிற்சி பெறுவது மிகப்பெரிய பெருமை என்று வருண் சக்ரவர்த்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மிகப்பெரிய சுவர் அவர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜாம்பவான் என உருக்கம்
ராகுல் டிராவிட்டுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள வருண் சக்ரவர்த்தி, ராகுலின் பெருமையை அந்த புகைப்படத்தின் பின்னால் இருக்கும் வாசகமே தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். அந்த சுவற்றில் ஜாம்பவான் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.